Published : 29 Aug 2017 08:24 AM
Last Updated : 29 Aug 2017 08:24 AM

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆர்.எம்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (18). மெக்கானிக்காக பணியாற்றி வந்த இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கடந்த 25-ம் தேதி பொன்னேரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்த நிலையில், நேற்று காலை 5 மணி அளவில் மூளைச்சாவு அடைந்தார்.

உடனே மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து பேசினர்.

குடும்பத்தினர் சம்மதம்

இதையடுத்து, அவரது உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் ஸ்டான்லியில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேருக்கும், மற்றொரு சிறுநீரகம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும், இதயம், நுரையீரல் ஆகியவை மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும் வழங்கப்பட்டன.

தானமாக பெறப்பட்ட உறுப்புகளை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மேடவாக்கம் கொண்டு செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் இல்லாத வாறு போலீஸார் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதுதவிர, 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x