Published : 28 Aug 2017 10:36 AM
Last Updated : 28 Aug 2017 10:36 AM

அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் தினகரன் தரப்பினர் தணி அணியாக செயல்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூடிவரும் நிலையில் இருதரப்பும் மாறி மாறி அறிக்கை, பேட்டி என பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதே தினகரன் தரப்பினர் கோரிக்கையாக உள்ளது. அதிமுக அணியினர் சசிகலாவை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர் வைத்தியலிங்கம் அறிவித்தார்.

மறுநாள் வைத்தியலிங்கத்தை நீக்கினார் தினகரன். அடுத்தடுத்து மாவட்ட நிர்வாகிகளை மாற்றும் தினகரன் பலரை கட்சியை விட்டு நீக்கிவருகிறார்.

இந்நிலையில் இன்று எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் நடக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

அறிவித்தப்படி இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. முதலில் அதிமுக ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் வந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் வரத்துவங்கினர். அவர்களை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தார். கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் தினகரன் அறிவிப்புகள் குறித்தும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டப்படும் இந்த கூட்டத்தின் முடிவை அடுத்தே தமிழகத்தின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x