Published : 27 Aug 2017 12:01 PM
Last Updated : 27 Aug 2017 12:01 PM

கும்மிடிப்பூண்டியில் எலி காய்ச்சலுக்கு பெண் பலி: கிராம மக்கள் சாலை மறியல்

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கும்ப்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு சரிதா என்ற மனைவியும், சிவராஜ் , ஜெயராஜ் என 2 மகன்களும் உள்ளனர். கடந்த 18-ம் தேதி சரிதாவுக்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி சரிதாவுக்கு காய்ச்சல் அதிகமானதால் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்தபோது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் சரிதா நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். எலி காய்ச்சலால் பெண் இறந்த சம்பவம் பற்றியும், கும்மிடிப்பூண்டி பகுதியில் எலி காய்ச்சல் பரவி இருப்பது பற்றியும் மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கும்ப்ளி கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதற் கிடையே, நோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், ஒருவாரமாக தேவையான நடவடிக்கை எடுக்காமல் இருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நிர்வாகத்தையும், சுகாதாரத் துறையையும் கண்டித்து கிராம மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கும்மிடிப் பூண்டியில் இருந்து கண்ணம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை சிறைப்பிடித்த மக்கள் சுகாதாரத் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்ப இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x