Published : 25 Aug 2017 01:32 PM
Last Updated : 25 Aug 2017 01:32 PM

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விடுதி மாறினர்

புதுச்சேரியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடந்த நான்கு நாட்களாக தங்கியிருந்த விடுதியை விட்டு வேறு விடுதிக்கு இடம் மாறினர்.

கடந்த வாரம் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைந்தது. ஓபிஎஸ் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆனார் . கட்சியில் வழிக்காட்டுதல் குழு ஓபிஎஸ் தலைமையில் அமைக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக சசிகலாவை பொதுச்செயலாளர் மற்றும் கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக வழிகாட்டுதல் குழு துணை தலைவர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

இந்த அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். பின்னர் அனைத்து எம்.எல்.ஏக்களும் பாதுகாப்பாக புதுச்சேரி அருகில் உள்ள சின்னவீரம் பட்டினம் என்ற இடத்தில் உள்ள விண்ட்பிளவர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் 16 ஆண் எம்.எல்.ஏக்கள் 2 பெண் எம்.எல்.ஏக்கள் அடக்கம். பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னையில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று முதலியார் பேட்டையில் உள்ள சன்வே நட்சத்திர விடுதிக்கு மாறினர்.

தற்போது தங்கியுள்ள விடுதியில் ஏற்கனவே விடுமுறைக்கு முன் பதிவு செய்தவர்கள் தங்க வருவதால் இந்த மாற்றம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். தற்போது சன்வே நட்சத்திர விடுதியில் 10 அறைகளில் இவர்கள் தங்குகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x