Published : 24 Aug 2017 09:29 AM
Last Updated : 24 Aug 2017 09:29 AM

என்ன செய்யப் போகிறது திமுக?

முதல்வர் பழனிசாமி அரசுக்கான ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக இரு அணிகள் இணைப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவிடம் நேற்று முன்தினம் நேரில் கடிதம் அளித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்த சில மணி நேரங்களிலேயே, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

ஆளுநர் நேற்று மும்பை சென்றுவிட்ட நிலையில் 19 எம்எல்ஏக்களின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் காலம் தாழ்த்தினால்...

எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினால் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டுமாறு பேரவைத் தலைவரிடம் கடிதம் அளிப்பது, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளை திமுக எடுக்கும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ.க்கள் (திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1) உள்ளனர். பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்று திமுக நிர்வாகிகளில் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 8 மாதங்கள் பொறுத்து விட்டோம். இனி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைத்தால் திமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.

அடுத்து வரும் தேர்தலில் அதிமுகவை விமர்சிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் திமுகவில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலருடனும் ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவசரப்பட்டு ஏதாவது செய்து ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சிக்கு வழிவகுத்து விடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x