Published : 23 Aug 2017 10:01 AM
Last Updated : 23 Aug 2017 10:01 AM

ரஜினி குடும்பத்தின் ஆஸ்ரம் பள்ளி திறப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் குத்தகை அடிப்படையில் இடத்தைப் பெற்று எங்கள் சங்கம் சார்பில் ஆஸ்ரம் பள்ளி நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் வரை வாடகை பாக்கி இல்லாதபோதும், நில உரிமையாளர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி பள்ளி நுழைவுவாயிலை பூட்டிவிட்டனர். இதற்காக ரூ. 6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடந்தது. பள்ளி பூட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக செந்தில்குமாரை நியமித்து விசாரணையை நீதிபதி மாலை 4 மணிக்கு தள்ளிவைத்தார். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளி மதியம் 1.30 மணியளவில் திறக்கப்பட்டு, காவலாளியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டதாகவும், வாடகை பாக்கி தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் நில உரிமையாளரின் வழக்கறிஞர் தியாகராஜன் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ரூ. 6.55 லட்சத்துக்கு ஒரு டிடியும், ரூ.1.24 லட்சத்துக்கு 4 டிடியும் நீதிபதி முன்னிலையில் நில உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. அதை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, வாடகை பாக்கி குறித்த விவரங்களை இருதரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x