Published : 22 Aug 2017 08:54 AM
Last Updated : 22 Aug 2017 08:54 AM
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவது பற்றி நேற்று நடைபெற்ற அதிமுக அணிகள் இணைப்பின்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரான சசிகலாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது பற்றி கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வைத்திலிங்கம் நேற்று தெரிவித்தார். ஆனால் இவ்வாறு கூறியது வைத்திலிங்கத்தின் தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
அதிமுகவின் பொதுச் செயலாளர் கட்சியின் பொது உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக கட்சியின் பொதுக்குழுவால் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சசிகலாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது பற்றி பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும்.
சசிகலா பற்றியோ, பொதுச் செயலாளர் பதவி பற்றியோ நேற்றைய நிகழ்ச்சிகளின்போது விவாதிக்கப்படவேயில்லை. இந்நிலையில் சசிகலா பற்றி வைத்திலிங்கம் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
ஜெயலலிதாவால் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட யாருமே அவர் அமைத்த ஆட்சியை அகற்ற நினைக்க மாட்டார்கள். ஆகவே, அதுபற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை. சசிகலாவை பதவியிலிருந்து நீக்கினால் என்னவாகும் என்று கேட்டால், கற்பனைகளுக்கெல்லாம் இப்போது பதில் கூற முடியாது.
இவ்வாறு ஓ.எஸ். மணியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT