Published : 18 Aug 2017 09:06 AM
Last Updated : 18 Aug 2017 09:06 AM

ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்க முடியுமா? - சட்ட நிபுணர்கள் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு, அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் யார் பெயரில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், அவர்களிடம் ‘பொது நோக்கத்துக்காக’ என்று சொல்லி அதற்கான நஷ்டஈடு கொடுத்துவிட்டு அரசு நினைவிடம் ஆக்கலாம். அதில் சட்டப்பிரச்சினை எதுவும் வரப்போவதில்லை.

மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையை அப்போதே நடத்தியிருக்க வேண்டும். “ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்தவிதம் வேறாக இருப்பதால் மக்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. அதனால் நீதி விசாரணை நடத்தியாக வேண்டிய நிலை. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவதில் பிரச்சினை எதுவும் இருக்காது. அவ்வாறு நினைவிடமாக ஆக்கக்கூடாது என எதிர்ப்பவர்கள் வழக்கு தொடர்ந்தால் அரசு அதை எதிர்கொள்ளும். “எனக்குப் பின்னால் என் சொத்துகள் எல்லாம் அதிமுக கட்சிக்கே சொந்தம்” என்று முதல்வர் ஜெயலலிதாவே ஒருமுறை கூறியிருக்கிறார். அதனால் அவரது இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதில் சிரமம் இருக்காது.

முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன்

முதல்வரின் 2 அறிவிப்புகளும் பொதுவான கோரிக்கைகள்தான். ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை அறிவிப்பு தாமதமான நடவடிக்கை. அப்போதே அறிவித்திருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்குவதில் பிரச்சினை இருக்காது. இந்தப் பிரச்சினைகளைவிட நீட் தேர்வு, கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி தண்ணீர், சென்னை தண்ணீர் தட்டுப்பாடு, ரேஷன் பொருள் விநியோகம் போன்றவைதான் மக்களின் தீவிர பிரச்சினைகளாக உள்ளன. இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பு மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்

முதல்வரின் அறிவிப்புகள் அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளன. நீதி விசாரணையின் பரிந்துரைகளை அரசு ஏற்கலாம், ஏற்காமல்கூட இருக்கலாம். “அரசு ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அதில் இருந்து வெளியே வருவதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு அதை இழுத்தடிக்கிறது” என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. நீதி விசாரணை கண்துடைப்புதான். இதற்குப் பதிலாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஜெயலலிதா வீட்டை எடுத்துக்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x