Published : 17 Aug 2017 09:00 AM
Last Updated : 17 Aug 2017 09:00 AM

மாணவர்களை வெளியேற்றி விட்டு லதா ரஜினிகாந்த் பள்ளிக்கு பூட்டு: நில உரிமையாளர் திடீர் நடவடிக்கை

வாடகை பிரச்சினையில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளிக் கட்டிடத்தை அதன் உரிமையாளர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிண்டியில் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த அந்த இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு மாணவர்கள், ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பள்ளியின் இடத்துக்கு வாடகை கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் ரூ.10 கோடி வாடகை தொகையாக தர வேண்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது ரூ.2 கோடி தருவதாக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். அந்தத் தொகையை தருவதிலும் இழுத்தடித்தனர். அதனால் பள்ளிக்கு பூட்டு போடும் சூழ்நிலை உருவானது’’ என்றார்.

வாடகை அதிகரிப்பு

ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்பத் தகராறு காரணமாக பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல, இது ஒரு சுரண்டல். காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை அதிகரித்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே ஆலோசித்து, அந்த இடத்தை காலி செய்ய முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சினையை முடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பூட்டு போட்டதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள், வேளச்சேரியில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x