Published : 13 Aug 2017 09:04 AM
Last Updated : 13 Aug 2017 09:04 AM

தமிழகம், புதுவையில் பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச் சேரி முழுவதும், இன்றும் பரவலாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்க ளாக காலை நேரத்தில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படுகிறது. மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் இடையே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலு குறைந்து வருகிறது. மேலும் ஆந்திர கடலோரப் பகுதி முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக கடலோரப் பகுதி வழியாக நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழை நீடிக்கும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, இளையான்குடியில் 8 செமீ, மதுக்கூரில் 7 செமீ, பொன்னேரியில் 6 செமீ, ஆர்.எஸ்.மங்கலம், ஆலங்குடி, பட்டுக்கோட்டை, சோழவரத்தில் தலா 5 செமீ, ஆம்பூர், மன்னார்குடி, பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம், செங்குன்றம், பரமகுடி, ஆர்.கே.பேட்டையில் தலா 4 செமீ, ராயக்கோட்டை, கமுதி, ஒரத்தநாடு, கோபிச்செட்டிப்பாளையம், எண்ணூர், ஊத்தங்கரை, கடலூர், அதிராம்பட்டினம், தேனி, கரம்பக்குடியில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று மாலையும், அடையாறு, கிண்டி, மாதவரம், வியாசர்பாடி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x