Published : 11 Aug 2017 07:50 PM
Last Updated : 11 Aug 2017 07:50 PM

பேரூர் படித்துறையில் ரூ.37 லட்சத்தில் தர்ப்பண மண்டபம்: நிரந்தர நீர்தேக்கம் கட்டும் அனுமதிக்காக காத்திருப்பு

கோவை மண்டலத்தின் முக்கிய திருத்தலம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இதன் அருகில், ஓடும் நொய்யலாற்றில் பதினெட்டு படிகள் கொண்ட சோழன் படித்துறை உள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த படித்துறையில் ஆடிப்பெருக்கன்று வெள்ளம் பதினெட்டு படிகள் தொட்டோடும் என்பது ஐதீகம். அந்த நாளிலும், ஆடி அமாவாசை தினங்களில் கன்னிமார் மற்றும் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதும் இங்கு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இதற்காக கோவை, திருப்பூர், பாலக்காடு, ஈரோடு, காங்கயம் பகுதிகளிலிருந்தெல்லாம் பல்லாயிரக் கணக்கானோர் வருவது வழக்கம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே (ஒரு சில ஆண்டுகள் தவிர) மழையின்மை காரணமாக நொய்யல் வறண்டு கிடக்கிறது. ஆடிப்பெருக்கன்று கூட தண்ணீர் வராத நிலை நீடித்து வருகிறது. இந்த ஆண்டும் கூட தண்ணீர் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறண்ட ஆற்றிலேயே கன்னிமார் பூஜை செய்யும் நிலை ஏற்பட்டடது.

இது இப்படியிருக்க இங்கே புரோகிதர்கள் தர்ப்பணம் செய்வதில் பிரச்சினை நிலவிக் கொண்டிருக்கிறது. பெரியவர்களுக்கு திதி கொடுப்பதோடு, நாகதோஷம், ராகு, கேது தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட, தோஷ பரிஹார நிவர்த்திக்கும், இங்கே ஹோமங்கள் படித்துறை ஓரம் உள்ள இடத்தில் நடந்து வந்தது. அதில் புரோகிதர்கள் பலர் மேற்பட்ட சிறு குடில்கள் அமைத்து, இந்த சடங்குகளை செய்து வந்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் புதிதாக தர்ப்பணம் மண்டபம் கட்டித் தருவதாக கோயில் நிர்வாகம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தது

அதற்காக பக்கத்தில் உள்ள இடத்தில் தற்காலிக குடில்கள் போட்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பித்தனர் புரோகிதர்கள். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையிலும் புதிய தர்ப்பண மண்டபம் பழைய இடத்தில் நிர்மாணிக்கப்படவில்லை. இப்போதுள்ள இந்த தற்காலிக தர்ப்பண குடில்களில் எந்தவிதமான வசதிகளும் செய்யப்படாததால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பக்கத்தில் சிமென்ட் தளம், இருக்கைகள், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இங்கு இல்லை.

பலமுறை தர்ப்பண திட்டம் தயாராகி மேலிடத்திற்கு அனுப்பி வைத்து, அது காலாவதியாகி, மீண்டும் திட்டம் தயாரித்து அனுப்பும் நிலையே நிலவி வந்தது. இப்படி மட்டும் இதுவரை மூன்று முறை திட்டவடிவம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இங்கு ரூ. 37.50 லட்சம் மதிப்பீட்டில் தர்ப்பண மண்டபம் கட்டிக் கொள்ள திட்ட வடிவம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இக்கோயில் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

''இங்கு தர்ப்பண மண்டபம் கட்டுவதற்காக, படித்துறையருகே கோவில் இடத்தில் 75 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு, 78 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் கட்டித்தரவும் முன்வந்தனர். அதற்கு மேலிடத்தில் சில திருத்தங்கள் செய்து அனுப்பினர். அதன்பிறகு 2013--14 நிதியாண்டில், அறநிலையத்துறை சார்பில் 86 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு தர்ப்பண மண்டபத்திற்கு தனியாகவும், அதை ஒட்டியுள்ள படித்துறையில் நிரந்தர நீர்த்தேக்கம் ஏற்படுத்த தனியாகவும், திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடங்கள் தயாரித்து அனுப்பப்பட்டது.

அதில் 24 செட் கொண்ட தர்ப்பண மண்டபம் மட்டும் ரூ. 37.50 மதிப்பில் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உத்தரவு வந்துவிட்டது. அதை ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனமே செய்து தர ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இது சிறிய பணி, இத்துடன் படித்துறை நீர்த்தேக்கத்திற்கும் (ரூ. 1.09 கோடி மதிப்பீடாம்)அனுமதி உத்திரவு வந்து விடட்டடும். அதையும் சேர்த்து செய்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள் அவர்கள். அதற்காக காத்திருக்கிறோம். அந்த உத்திரவு சீக்கிரமே வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அது வந்தவுடன் பணிகள் ஆரம்பித்துவிடும்!'' என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x