Published : 11 Aug 2017 11:57 AM
Last Updated : 11 Aug 2017 11:57 AM
தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "எப்போது எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணி என்று அதிமுக பிரிந்ததோ அப்போதிலிருந்தே தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு வர வேண்டும். நிச்சயமாக நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதில் இருந்து தமிழகத்தில் அசாதரண சூழல் நிலவுகிறது. இந்த அசாதரண சூழலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய அசாதாரண சூழலில் தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு விரோதமானது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் அமர்த்தி அழகுபார்க்க கட்சித் தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், "என்னை நீக்க முதல்வர் கே.பழனிசாமி அணிக்கு அதிகாரம் இல்லை. மடியில் கனம் இருப்பதால் அவர்கள் பயப்படுகின்றனர்" என பதில் அளித்திருந்தார்.
அதிமுக இரு அணிகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT