Published : 10 Aug 2017 09:38 AM
Last Updated : 10 Aug 2017 09:38 AM

நெடுங்கதையாக தொடரும் ஓபிஎஸ் கிணறு பிரச்சினை: லெட்சுமிபுரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடக்கம்

லெட்சுமிபுரம் கிராமத்தில் பிரச்சினைக்குரிய கிணறு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனால், கிணறு பிரச்சினை நெடுங்கதையாக தொடர்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் ஊராட்சியின் கிணறு வற்றியதற்கு, இதன் அருகில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நிலத்தில் தோண்டப்பட்ட மெகா கிணறுதான் காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து தொடர் போராட்டங்களை நடத்தினர்.

அதன் பிறகு ஊர்மக்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஓபிஎஸ் தரப்பினர் கிணற்றை இலவசமாகவும், அதனைச் சுற்றியுள்ள நிலத்தை கிராம மக்களுக்கு விற்பதாகவும் கிராம கமிட்டியினரிடம் உறுதி அளித்தனர்.

கிராம மக்கள் அதிர்ச்சி

எனினும், உறுதி அளித்ததற்கு மாறாக, கிணறு உள்ள நிலம் ஓ. பன்னீர்செல்வத்தின் நண்பரான லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கைமாறியது. இதுகுறித்த தகவல் அறித்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஓ.பி.எஸ். தரப்பினர் கிணற்றுக்கு பதிலாக ஊராட்சி கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தி தருவதாக கூறினர். இதற்கு கிராம கமிட்டியினர் ஒப்புக்கொள்ளவில்லை.

புதிய கிணறுக்கும் எதிர்ப்பு

இதையடுத்து, இலவசமாக கிராமத்துக்கு கிணற்றை தருவதாகவும், இந்த கிணற்று நீரில் விவசாயம் செய்த பகுதிகளை காப்பாற்ற சிறிது தூரத்தில் புதிய கிணறு வெட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதற்கும் கிராம கமிட்டியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘வேறு கிணறு வெட்டக் கூடாது. சம்பந்தப்பட்ட நிலத்தையும் கிராமத்தினரே வாங்கிக் கொள்கிறோம்’ என்று கிராம கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஆலோசனை

இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ஊர் மக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவை அறிவிப்பதாக கிராம கமிட்டியினர் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x