Published : 09 Aug 2017 08:19 AM
Last Updated : 09 Aug 2017 08:19 AM

கிணறு பிரச்சினைக்கு தீர்வு கோரி லெட்சுமிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்

கிணறு பிரச்சினைக்கு தீர்வு கோரி லெட்சுமிபுரம் கிராம மக்கள் நேற்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், மனித சங்கிலி போராட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கிராம ஊராட்சியின் நீர் ஆதாரமான பொதுக் கிணறு வற்றியதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் வெட்டப்பட்ட மெகா கிணறுதான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்திய ஊர் மக்கள் கிணற்றை ஊராட்சிக்கு எழுதித் தர வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைப்பதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், தற்போது தங்களை ஏமாற்றி வருவதாகக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

லெட்சுமிபுரத்தில் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம், விளக்கு ஏந்தி ஊர்வலம் என போராட்டம் நடத்தியவர்கள், நேற்று காலை தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், மாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன் கூறியதாவது: கிணறு குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், கிணறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதில் தாமதமாகிறது.

வழக்கின் தீர்ப்பு கிணற்றை பயன்படுத்தி வருபவர்களுக்கு எதிராக வந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாது. அப்போது, ஊராட்சி கிணற்றில் தண்ணீர் கிடைத்துவிடும். எனினும், கிணறு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x