Published : 08 Aug 2017 08:04 AM
Last Updated : 08 Aug 2017 08:04 AM

தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச் சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதி முதல் கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. மேலும் கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது மட்டுமல்லாது வெப்பச் சலனமும் நிலவி வருவதன் காரணமாக தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, வந்தவாசியில் 5 செமீ, திருப்பூர், மன்னார்குடியில் தலா 3 செமீ, அறந்தாங்கி, நாகப்பட்டினம், ஓமலூர், ஆரணியில் தலா 2 செமீ, சென்னை, பள்ளிப்பட்டு, பெரியார், சின்னகல்லாறு, போளூர், செய்யார், மேட்டுப் பாளையம், வால்பாறை, தருமபுரி, செங்குன்றம், மயிலம், நடுவட்டம், அதிராம் பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x