Published : 07 Aug 2017 10:00 AM
Last Updated : 07 Aug 2017 10:00 AM

சேலம் அருகே மகள் காதல் திருமணம்: பெற்றோர் உட்பட 4 பேர் தற்கொலை

ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் செயலால் மனமுடைந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன் பாளையம் தாண்டானூரைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்(46). இவர் மனைவி ராணி(40). இவர்களுக்கு 21 வயதில் மூத்த மகள் உள்ளார். மேலும், ஆர்த்தி(18) என்ற மகளும், மகன் நவீன்குமாரும்(16) இருந்தனர்.

மூத்த மகள் பிஏ படித்துவிட்டு வீட்டில் இருந்தார். ஆர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். நவீன்குமார் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

உறவினரோடு காதல்

வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி அருகே உள்ள சின்னகவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் ராஜேந்திரனுக்கு தூரத்து உறவினர் ஆவார். மணிகண்டனுக்கும் ராஜேந்திரனின் மூத்த மகளுக்கும் காதல் ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி மணிகண்டனை அவர் திருமணம் செய்து கொண்டார். மேலும், பாதுகாப்பு கேட்டு காரிப்பட்டி காவல் நிலையத்தில் கணவருடன் தஞ்சமடைந்தனர்.

அங்கு வந்த பெற்றோரிடம் காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவர் கூறிவிட்டார். இதனால் அவரது பெற்றோர் மனமுடைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் ராஜேந்திரனின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டைத் திறந்து பார்த்தனர். வீட்டினுள் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி, இளைய மகள் ஆர்த்தி, மகன் நவீன்குமார் ஆகிய 4 பேரும் இறந்து கிடந்தனர். அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது.

தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீஸார், 4 பேரின் சடலங்களை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x