Published : 26 Jun 2017 08:53 AM
Last Updated : 26 Jun 2017 08:53 AM

7 ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள் நிறைவடைந்தது: சென்னை போரூர் மேம்பாலத்துக்கு எம்ஜிஆர் பெயர் - முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்

கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த போரூர் மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து முதல்வர் கே. பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று பாலத்தை திறந்து வைத்தார். புதிய பாலத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பரங்கிமலை - பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடமான போரூர் ரவுண்டானா வழியாக நாள்தோறும் ஒரு லட்சத்து18 ஆயிரத்து, 15 வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் போரூர் ரவுண்டானா சந்திப்பில் மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது.

இதன்படி, சென்னை பெருநகர நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.34.72 கோடி மதிப்பில் போரூர் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2010 பிப்ரவரியில் தொடங்கியது. நிலம் கையகப்படுத்துதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மாற்றும் பணிகளில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகப் பணிகள் முடங்கின.

இதனால், முடங்கிய மேம்பாலப் பணியைத் துரிதமாக முடிக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, மாற்றியமைக்கப்பட்ட மேம்பால வடிவத்தின்படி, ரூ.54 கோடி மதிப்பில் கடந்த 2015 ஜூலையில் பணிகள் தொடங்கின. இதன்படி 505 மீட்டர் நீளம் மற்றும் தலா 17.20 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழித் தடங்களுடன் கூடிய மேம்பாலப் பணி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு அண்மையில் முடிவுக்கு வந்தது.

இதனால், திறப்பு விழாவுக்குப் போரூர் மேம்பாலம் காத்திருந்த நிலையில், கடந்த 20-ம் தேதி இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகப் போரூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் திறப்பு விழாவுக்குக் காத்திருந்த போரூர் மேம்பாலத்தில் இருந்த தடுப்புகளை அகற்றி, பாலத்தைப் பயன்படுத்தினர். இதை அறிந்த போலீஸார், அவசர அவசரமாகத் தடுப்புகளை அமைத்து, பாலத்தை மீண்டும் மூடினர்.

இந்நிலையில் மேம்பாலத்தைக் கடந்த 22-ம் தேதி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். பின்னர் பாலம் பயன் பாட்டுக்கு உகந்தது எனத் தெரிய வந்ததையடுத்து, ஜூன் 25-ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. புதிய பாலத்துக்கு ‘பாரத ரத்னா புரட் சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மேம் பாலம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் அரசு அறிவித்தபடி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று முதல்வர் கே. பழனிசாமி பாலத்தைத் திறந்து வைத்தார். முதல் வாகனப் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் முதல்வர் பேசியதாவது: கடந்த கால ஆட்சியாளர்கள் நிலம் கையகப்படுத்தாமலேயே போரூர் மேம் பாலப் பணியைத் தொடங்கிவிட்டனர்.

2011-ல் அதிமுக ஆட்சி பொறுப் பேற்றவுடன் தேவையான நிலம் இல்லாத காரணத்தினால் பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுப் பணிகள் தொடங்கின. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தர வின்படி பாலப் பணி மற்றும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங் கள் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் ராஜீவ் ரஞ்சன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x