Published : 20 Jan 2015 09:51 AM
Last Updated : 20 Jan 2015 09:51 AM

5 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்பு: மெரினாவில் சுண்டல் விற்கும் திருமலையின் தன்னார்வ சேவை

சின்னச் சின்ன காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்கள் பெரும்பாலும் சென்னைக்குத்தான் வண்டி ஏறு கிறார்கள். இப்படி கடந்த 5 ஆண்டுகளில் சென்னைக்கு ஓடிவந்த 50-க்கும் மேற்பட்ட சிறு வர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்கும் திருமலை.

திருச்சியைச் சேர்ந்த மாண வனும், அவனது நண்பனும் அண்மையில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து விட்டார்கள். மெரினாவில் சுற்றித் திரிந்த இவர்களை பத்திரமாக மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் திருமலை. இப்படி பிரதி பலன் பாராமல் பலரை மீட்டுக் கொடுத்திருந்தாலும் ‘‘மாசத்துக்கு ஒரு பொடியனாச்சும் இப்படி வந்துடுறாங்க. அதனால, எத்தன பேர மீட்டுக் குடுத்தோம்னு கணக்கெல்லாம் வச்சுக்கல’’ என்று அடக்கமாகச் சொல்கிறார் திருமலை.

சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த திருமலை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே பேல்பூரி, சுண்டல் வியாபாரம் செய்யும் கடை ஒன்றில் 9 ஆண்டுகளாக வேலை செய்கிறார். வியாபாரத்துக்கு நடுவில், மெரினாவில் போக்கிடம் தெரியாமல் சுற்றித் திரியும் சிறுவர்களை கண்காணிக்கும் திருமலை, சமயம் பார்த்து அவர்களிடம் நயமாக பேச்சுக் கொடுத்து அவர்களைப் பற்றிய சுய விவரங்களைப் பெற்று பெற்றோருக்கு தகவல் கொடுத்து விடுவார். இப்படித்தான், வீட்டை விட்டு வெளியேறி வந்து மெரினாவில் சுற்றித் திரிந்த சிறுவர் கள் பலரை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்திருக்கிறார்.

‘‘வீட்டைவிட்டு ஓடிவந்த பசங்கள தனியா அடையாளம் கண்டுபிடிச்சிடலாம். 2 நாளைக்கு மேல யாராச்சும் இந்தப் பகுதியில சுத்திட்டு இருந்தாங்கன்னா அவங் கள கூப்பிட்டு வச்சு, எதாச்சும் சாப்பாடு வாங்கிக் குடுப்பேன். அப்புறமாத்தான் அவங்களப் பத்தி விசாரிக்க ஆரம்பிப்பேன். எடுத்ததுமே எல்லாரும் உண்மையைச் சொல் லிட மாட்டாங்க. அதனால, அவங்க வச்சிருக்கிற புத்தகம், நோட்டு களை வாங்கி நோட்டம் பார்ப் பேன். அதுக்குள்ளயே எனக்குத் தேவை யான விவரங்கள் கிடைச்சிடும்.

சில நேரங்கள்ல எந்த விவரமும் கிடைக்காது; பையனும் வாயைத் திறக்க மாட்டான். அதனால, அவன அப்படியே விட்டுட்டுப் போயிட மாட்டேன். எங்கூடவே வீட்டுக்கு கூட்டிட்டு போவேன். எங்க மொதலாளியம்மா வீட்டுல தான் நாங்க அஞ்சு பேரு தங்கி இருக்கோம். அவங்கட்ட சொல் லிட்டு அந்த பையனையும் தங்க வச்சுப்பேன். ரெண்டு நாள் கழிச்சு மெதுவா அவனாவே என்கிட்ட எல்லா உண்மையையும் சொல் லிருவான். அதுவரைக்கும் அவசரப்படாம பொறுமையா இருப்பேன்.

அப்பா - அம்மா பேரு, போன் நம்பர், எதுக்காக வீட்டைவிட்டு வெளியேறி வந்தான் என்ற விஷயம் எல்லாத்தையும் அந்தப் பையனே சொல்லிருவான். அதுக்கப்புறம் அவங்க பெற்றோருக்கு தகவல் சொல்லி அவனை அவங்கட்ட ஒப்படைப்பேன். நான் பாக்குற வேலைக்கு நடுவுல இது எனக்கு கூடுதல் சுமைதான். ஆனாலும். புள்ளைகள காணாம தவிக்கிற பெற்றோர் இங்க வந்து அந்தப் புள்ளைகள கட்டிப் பிடிச்சு கண்ணீர் விடுறத பாக்குறப்ப அந்த சுமையோட வலி தெரியாம போயிடுது. அதனால, தொடர்ந்து இந்த சேவையை செஞ்சுட்டு இருக் கேன் என்றார் திருமலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x