Published : 31 Oct 2016 08:37 AM
Last Updated : 31 Oct 2016 08:37 AM

3 தொகுதி தேர்தலில் 5 முனைப் போட்டி: பிரச்சார பணிகளில் கட்சிகள் தீவிரம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக இடையே 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. நாளை மறுநாள் (நவம்பர் 2) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் வேட் பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் வி.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எம்.ரங்க சாமி (தஞ்சாவூர்), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோரும் திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமி (அரவக்குறிச்சி), டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), டாக்டர் பா.சரவணன் (திருப்பரங்குன்றம்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தேமுதிக சார்பில் அரவை எம்.முத்து (அரவக்குறிச்சி), வி.அப்துல்லா சேட் (தஞ்சாவூர்), டி.தனபாண்டியன் (திருப்பரங் குன்றம்), பாமக சார்பில் பாஸ் கரன் (அரவக்குறிச்சி), ஜி.குஞ்சி தபாதம் (தஞ்சாவூர்), டி.செல்வம் (திருப்பரங்குன்றம்), பாஜக சார்பில் எஸ்.பிரபு (அரவக்குறிச்சி), எம்.எஸ். ராமலிங்கம் (தஞ்சாவூர்), ஆர்.சீனிவாசன் (திருப்பரங் குன்றம்) ஆகியோர் போட்டியிடு கின்றனர்.

இதன்மூலம் 3 தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதுதவிர 3 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ஏ.அன்வர்ராஜா உள்ளிட்ட 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

திமுக சார்பில் 34 மாவட்டச் செயலாளர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். தஞ்சாவூர் தொகுதியில் திருச்சி தெற்கு, வடக்கு, தஞ்சை தெற்கு, வடக்கு, திருவாருர், நாகை வடக்கு, தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டச் செயலாளர்களும், அரவக்குறிச்சி தொகுதியில் கரூர், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, திண்டுக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் மத்தி, கிழக்கு, மேற்கு, ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய 13 மாவட்டச் செயலாளர்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, தேனி, விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள் என திமுக அறிவித்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களுக்கான தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

3 தொகுதிகளிலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த், பிரேமலதா விஜய காந்த், பாமக வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ், அன்பு மணி ராமதாஸ், பாஜக வேட் பாளர்களை ஆதரித்து தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x