Published : 22 Aug 2016 02:48 PM
Last Updated : 22 Aug 2016 02:48 PM

2006-ல் எனக்கு இருந்த துணிச்சல் இப்போது திமுக தலைவருக்கு இருக்கிறதா?- சட்டப்பேரவையில் ஜெயலலிதா பதிலடி

காவல்துறை மானியக் கோரிக்கையில் இருந்து தங்களை விலக்கி வைக்க வேண்டும் என்று திட்டமிட்டே திமுகவினரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக ஸ்டாலின் கூறிவரும் நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கையில் பங்கேற்க திமுகவுக்கு துணிவில்லை என தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

மேலும், 2006-ல் அதிமுக உறுப்பினர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்ட நேரத்தில், சஸ்பென்ட் செய்யப்படாத ஒரே சட்டமன்ற உறுப்பினராகிய நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்துகளை எடுத்துரைக்கவில்லையா? அந்தத் துணிச்சல் என்றைக்காவது திமுக தலைவருக்கு இருந்ததுண்டா? என்று அவையில் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் பதிலுரை:

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தனது பதிலுரையில், "இன்று இந்த மாமன்றத்தில் தாக்கல் செய்த காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

எதிர்க்கட்சியினர் இன்றைய விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க.வைச் சார்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாள்தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே கடந்த 16.8.2016 அன்று இந்த சட்டமன்றத்தில் ‘சில நேரங்களில் …. எங்களுடைய உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே சில வேண்டத்தகாத வார்த்தைகள் சொல்லக் கூடிய வாய்ப்புகள் வருகிறது. அது மைக்கில் வரவில்லை. இருந்தாலும், சில நேரங்களில் சத்தத்தில் வெளிவருகிறது. அதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். நான் அதற்காக வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன், உங்களிடத்தில் மன்னிப்பு கூட கேட்டுக்கொள்ள காத்திருக்கிறேன் என்று பேரவைத் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் 79 பேர் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவைத் தலைவர் அவர்களால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து ஒரு வார காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை திரிக்கும் விதமாக, திமுகவினரை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்கும் விதமாக இவ்வாறு செய்யப்பட்டதாக சொல்லி வருகின்றனர்.

யாருக்கும் துணிவில்லை:

அவர்களுக்கு உண்மையிலேயே விவாதங்கள் மீது அக்கறையும், நம்பிக்கையும் இருக்குமேயானால் 10 தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வந்திருக்கலாமே ? வந்தார்கள், ஆனால் உடனே வெளிநடப்பு செய்து விட்டார்கள். அவர்களில் இருவர் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கலாமே? இன்று வந்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள் கூட இருந்தார்களே? அவர்கள் என்ன பேசத் தெரியாதவர்களா? அவர்களில் இருவராவது தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கலாமே?

2006-ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த போது, அனைத்து அஇஅதிமுக உறுப்பினர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்ட நேரத்தில், அவ்வாறு சஸ்பென்ட் செய்யப்படாத ஒரே சட்டமன்ற உறுப்பினராகிய நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை எடுத்துரைக்கவில்லையா? அந்தத் துணிச்சல் என்றைக்காவது திமுக தலைவருக்கு இருந்ததுண்டா?

வருங்காலத் தலைவர் என்றும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்றும் தன்னை சொல்லிக் கொள்ளும் நபருக்கு அந்தத் துணிச்சல் இருக்கின்றதா? அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தாலும், திமுக தலைவர் சஸ்பென்ட் செய்யப்பட வில்லையே? துணிவு இருந்தால், வந்திருக்கலாம், வந்திருக்க வேண்டும், பேசியிருக்க வேண்டும்.

காவல் துறை விவாதத்தில் பங்கேற்றால் தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர் கெட்டிருந்தது என்பது பற்றி விவாதிக்கப்படும்; அதற்கு எந்த பதிலும் அளிக்க இயலாது என்பதால் தான் தி.மு.க.வினர் எவரும் இன்றைய விவாதத்தில் பங்கேற்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.

சஸ்பென்ட் செய்யப்படாத திமுக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அவர்கள் வந்திருந்தால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வெட்கக் கேடான சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான சம்பவங்களை எல்லாம் எடுத்துரைக்கலாம் என்றும், அதற்கான ஆதாரங்களை இந்தப் போட்டோ ஆல்பத்தில் கொண்டு வந்து, அதை சபாநாயகர் அவர்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறேன். நான் தயாராக வந்தேன். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல், பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

எடுபடாத பாட்டு:

தமிழக மக்கள் எப்போதும் தெளிந்த அரசியல் பார்வையும், தொலைநோக்கு சிந்தனையும் கொண்டவர்கள். விளம்பர யுத்திகளாலும் முழக்கங்களாலும் தங்களை ஏமாற்றிவிட முடியாது என்பதை மீண்டும் கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபித்துள்ளார்கள்.

பொழுதுபோக்குகள் நிறைந்த திரைப்படங்களில் சிறந்த பொருளோ கருத்துகளோ இல்லாமலேயே பாடல்களை வடிப்பதுண்டு. இவை பொழுதுபோக்கு அம்சங்களாகத் தான் திரைப்படங்களிலே இடம் பெறும். பொழுதுபோக்கிற்காக அந்த பாடல்கள் பலராலும் பாடப்படும் என்றாலும், அப்படிப்பட்ட பாடல்களை வைத்து உருவாக்கப்படும் முழக்கங்கள் மூலம் வெற்றி பெற இயலாது என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஊர்ஊராக சென்று, வீதி வீதியாகச் சென்று, வீடு வீடாகச் சென்று நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் கேட்டார், அதுமட்டுமல்ல, பாட்டும் பாடினார், பாடியும் பார்த்தார், எதுவும் பலிக்கவில்லை.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோட்பாட்டைக் கொண்ட ஆட்சியே தொடர வேண்டும்; மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் ஆட்சியே தொடர வேண்டும்; அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் ஆட்சியே தொடர வேண்டும்; ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் ஆகியோரை கை தூக்கி விடும் ஆட்சியே தொடர வேண்டும்;

அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை முன்னிறுத்தும் ஆட்சியே தொடர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றிய ஆட்சியே தொடர வேண்டும், என்ற கருத்துகளை தமிழக மக்கள் கொண்டிருந்ததால் தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாம் முறை எங்களுக்கு வெற்றியை அளித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்தி தமிழக மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை மீண்டும் எனக்கு நல்கியுள்ளார்கள்.

சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி, திமுகவினர் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், பொது அமைதி பாதிக்கப்பட்டு விட்டது என்றும் தொடர்ந்து உண்மைக்கு மாறாக தெரிவித்து வருகின்றனர். பொது அமைதி, சீரான சட்டம்-ஒழுங்கு நிலைமை என்பதும், குற்ற நிகழ்வுகள் என்பதும் வெவ்வேறானவை.

மூன்று போலீஸ் கமிஷன்களை தங்கள் ஆட்சி காலத்தில் அமைத்ததாக பெருமைபட்டுக்கொள்ளும் தி.மு.க.வினர் அந்த கமிஷன்கள் அளித்த அறிக்கைகளை சரியாக படித்துப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூன்றாவது காவல் ஆணையம் தனது அறிக்கையில் சட்டம்-ஒழுங்கைப் பற்றி விவாதித்துள்ளது.

அதில், உச்சநீதிமன்ற உத்தரவுகளை எடுத்துச் சொல்லி, சட்டத்தை மீறும் ஒவ்வொரு செயலும் ஒழுங்கை பாதிக்கிறது. ஆனால், சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் செயல்கள் அனைத்தும் பொது அமைதியை பாதிக்கும் என கூற இயலாது. பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கைகள் மாநிலத்தின் பாதுகாப்பை பாதிக்கும் என கருத முடியாது என தெரிவித்துள்ளது.

அதாவது, குற்ற நிகழ்வுகள் சட்டத்திற்கு எதிரானதாக, ஒழுங்கை பாதிக்கக் கூடியதாக திகழ்ந்தாலும், அவை பொது அமைதிக்கு பங்கமானது என்றோ, இந்த நிகழ்வுகளாலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றோ கருத இயலாது.

திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்:

2006 முதல் 2011 வரையிலான அப்போதைய தி.மு.க. ஆட்சியில் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் இருந்ததோடு மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதி ஆகியவையும் சீர்குலைந்திருந்தன.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு சென்ற போது மதுரை ரயில் நிலையத்தில் அவரை தாக்கக் கூடிய சூழ்நிலை இருந்ததாக சொல்லப்படுவது போன்ற நிகழ்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு நான் இவ்வாறு தெரிவிக்கவில்லை.

13.6.2006 அன்று காலை அப்போதைய ஸ்டாலின் மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து தொண்டர்களுடன் தனது காருக்கு சென்று கொண்டிருந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க கண்ணாடி அணிந்த நபர் ஸ்டாலினை நோக்கி கை குலுக்குவதற்காக கை நீட்டியுள்ளார் என்றும், அப்போது ஸ்டாலின் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த அவில்தார் சுரேஷ்குமார் இதை கவனித்து உடனடியாக அந்த நபரை பின்னோக்கி இழுத்துள்ளார் என்றும், அந்த அடையாளம் தெரியாத நபர் சிறிய கத்தி ஒன்றை தவற விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார் என்றும்; அவரை பின்னால் இழுத்த போது அவில்தார் சுரேஷ்குமாரின் கையில் சிறு காயம் ஏற்பட்டது என்றும், சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதுரை ரயில்வே காவல் நிலையம் குற்ற எண்.145/2006 இ.த.ச.பிரிவு 307-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாநில குற்றப்பிரிவு குற்றபுலனாய்வுத் துறைக்கு இந்த வழக்கு 17.6.2006 அன்று மாற்றப்பட்டு எதிரியை கண்டுபிடிக்கவே இயலவில்லை.

ஒரு மாநில அமைச்சரை தாக்கும் நோக்கோடு ஒருவர் செல்ல முடியும் என்றால், அது ஒரு ஆழ்ந்த கவலை கொள்ளக் கூடிய ஒழுங்குப் பிரச்சனை என்றாலும், இதை வைத்து மட்டும் அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்று நான் சொல்லவில்லை.

அப்போதைய தி.மு.க. ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். காவல் துறையின் செயல்பாட்டில் பல்வேறு குறுக்கீடுகள் இருந்தன. பொதுமக்கள் தங்களின் நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை பாதுகாத்து வைப்பதே கூட கடினம் என்ற நிலை ஏற்பட்டது.

அன்றைய தி.மு.க.ஆட்சியின் போது சட்ட விரோத கும்பல்கள் நிலம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களை மிரட்டியும் அவர்களை கடத்திச் சென்றும், அவர்களது சொத்துகளை மிகக் குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவதையும், போலியான ஆவணங்களை தயார் செய்து சொத்துகளை தங்கள் பேரில் பதிவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

எனவே தான், அப்போதைய தி.மு.க ஆட்சி காலத்திலேயே நில அபகரிப்பு, மோசடி மற்றும் போலி பத்திரங்கள் குறித்து 6,615 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

சென்னை காவல் துறையின் மத்திய காவல் பிரிவு நில ஆக்கிரமிப்பு மற்றும் மோசடி குறித்து விசாரிக்க உதவி ஆணையாளர் தலைமையில் தனிப் பிரிவு ஒன்று இருந்தது. எனினும், புகார் அளிக்கவே பலர் அச்சம் கொண்டு புகார் அளிக்காமல் இருந்தனர். பெறப்பட்ட புகார்களிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இனங்களில் கூட சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு தங்கள் உடைமைக்கும், உயிருக்கும் அஞ்சியே மக்கள் இருந்த காரணத்தால் தான், அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்றே எவரும் தெரிவிக்கின்றனர்.

குற்றங்கள் குறித்து காவல் துறையினரிடம் புகார்கள் அளிக்கப்படும் போது அந்தப் புகார்கள் பதிவு செய்யப்படாமலும், விசாரணை செய்யப்படாமலும் இருந்தால், காவல் துறை மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.

அவ்வாறு பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் போது, காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதால், புகார் அளிப்பதால் எந்த பயனும் இல்லை என புகார் அளிப்பதைக் கூட மக்கள் நிறுத்தி விடுவர். அதன் காரணமாகவும், காவல் துறை நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவும், குற்றங்கள் பெருகுவதோடு, சட்டம்-ஒழுங்கும் பாழ்படும். இந்த நிலைமை தான் அப்போதைய தி.மு.க. ஆட்சியில் இருந்தது.

மாயமான ஹார்லிக்ஸ்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள திருவாலய நல்லூரில் உள்ள கிடங்கிற்கு 12.7.2010 அன்று வந்த லாரியில் இருந்து 135 ஹார்லிக்ஸ் பெட்டிகள், அதாவது 3,240 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் கொள்ளை போன நிகழ்வை உறுப்பினர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன். அது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அந்தப் புகாரினை காவல் துறை அதிகாரி பதிவு செய்ய மறுத்துவிட்டார்.

இது குறித்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது. காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவ்வழக்கு கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடிவு செய்யப்பட்டு 29.12.2010 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது போன்ற நிகழ்வுகளால் தான் அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொண்டே வந்தது.

5 ஆண்டுகளில் குறைந்த குற்ற நிகழ்வுகள்:

குற்ற நிகழ்வுகள் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு தாக்கலான 1,641 கொலை வழக்குகளில், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப பிரச்சனைகள், காதல் விவகாரங்கள், பணம் கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்சனைகள், தனிப்பட்ட முன்விரோதம், வாய் தகராறு போன்ற காரணங்களினால் நிகழ்ந்துள்ளன. ஒரு சில கொலை சம்பவங்கள் மட்டுமே, பழிவாங்குதல், போக்கிரித்தனம், ஆதாயம் போன்ற காரணங்களுக்காக நடந்துள்ளன.

தனிப்பட்ட முன்விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல், சொத்து பிரச்சனைகள்; கணவன், மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களிடையே இருந்து வரும் பிரச்சனைகள் போன்ற சில தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிப்பதில்லை. அப்பிரச்சனைகள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே காவல் துறையினரிடம் தெரிவித்தால், அப்பிரச்சனைகளில் தக்க நடவடிக்கை எடுத்து, அப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர இயலும். சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்காமல் இருந்து விடுவதால், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அச்சம்பவங்களைத் தடுக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

காவல்துறை நடவடிக்கை:

இருப்பினும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு 1,763 கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 847 கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இவ்வழக்குகளை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதாவது திமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும் போது, 2015 ஆம் ஆண்டு 2.97 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு 11,196 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இவ்வாண்டு 30.6.2016 வரை 5,868 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. 2010 ஆம் ஆண்டு வழக்குகளை, அதாவது திமுக ஆட்சியில் இருந்ததை, 2015 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில் 23.23 சதவீதம் குறைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொலை வழக்குகள் உட்பட சொத்து சம்பந்தமாக 23,068 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு 19,931 வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இவ்வாண்டு 30.6.2016 வரை 9,979 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. திமுக ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு தாக்கலான மொத்த சொத்து வழக்குகளை 2015 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடும் போது 3,137 வழக்குகள் குறைந்துள்ளன.

காவல் துறையினர், குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்து பல முக்கிய கொலை, கொள்ளை வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து, களவு போன பொருட்களை மீட்டு வருவதுடன், தொடர்ந்து குற்றம் செய்யும் குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினர், சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு ரோந்துகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், பொதுமக்களிடையே குற்றங்கள் நடக்கும் முறை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; பொதுநல அமைப்புகள், குடியிருப்பு சங்கங்களின் உறுப்பினர்களை ரோந்து பணிகளுக்கு பயன்படுத்துதல், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வழக்கமான குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல், கொலை வழக்கு எதிரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்தல், கூலிப்படையினர் நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரித்து அவர்களை கைது செய்தல் போன்ற குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழ்நிலை மற்றும் நகரமயம் ஆகுதல் போன்றவற்றால் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது தான் இந்திய அளவில் உள்ள நிலை. ஆனால் இதற்கு மாறாக, தமிழ்நாட்டை, நமது மாநிலத்தைப் பொறுத்தவரை காவல் துறையினர், குற்றவாளிகள் மீது எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளினால், குற்ற நிகழ்வுகள் குறைந்து வந்துள்ளன என்பதை தற்போது நான் தெரிவித்த புள்ளி விவரங்கள் தெளிவாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x