Last Updated : 24 Apr, 2015 10:01 AM

 

Published : 24 Apr 2015 10:01 AM
Last Updated : 24 Apr 2015 10:01 AM

20 ஆண்டுகளாக படுக்கையில் இருப்பவரை காதலித்து மணந்த புதுமைப்பெண்

படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்.

ஆடம்பரம், அழகு, ஆஸ்தி, அந்தஸ்து என ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்களில் பல பிளவுபட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இவற்றுக்கு மத்தியில் மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்து கைகூடிய காதல் திருமணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருதூர் குறிச்சி காலனியில் இத்திருமணம் நடந்துள்ளது. மணமகன் ஜெயகுமார் (30) கடந்த 20 ஆண்டு களாக கை, கால்கள் ஊனமாகி படுத்த படுக்கையாக உள்ளார். இவரை திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பருத்திபாட்டை சேர்ந்த சிவகுலதேவி (28) என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணமகன் ஜெயகுமார் படுக்கையில் இருந்தபடியே சிவகுலதேவியின் கழுத்தில் தாலி கட்டினார்.இந்த திருமணம் வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் பரவி, `லைக்’களை அள்ளியது. `தி இந்து’ நாளிதழிடம் மணப்பெண் சிவகுலதேவி கூறியதாவது:

`இரட்டையரான விஜயகுமார், ஜெயகுமார் சகோதரர்களுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட நோய் தாக்குதல் காரணமாக, அவர்களால் எழுந்து நடக்க முடியாது. 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளனர்.

இவர்களில் மூத்தவரான விஜயகுமாரை, கேரள மாநிலத்தை சேர்ந்த மஞ்சுஷா என்ற பெண் திருமணம் செய்து கொண்டதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் பார்த்தேன். படுத்த படுக்கையாக இருக்கும் விஜய குமாருக்கு மஞ்சுஷா வாழ்க்கை கொடுத்தது என்னை கவர்ந்தது. அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆடம்பரமான ஒருவரை திருமணம் செய்வதைவிட, மணம் முடிப்பவருக்கு சிறந்த சேவை செய்வதுடன் நல்ல மனைவியாக வாழ்நாள் முழுவதும் இருக்க முடிவு செய்தேன். ஜெயகுமாரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித் தேன். அவரிடம் மனம் விட்டு பேசினேன். அவர்தான் முதலில் என்னிடம் காதலை சொன்னார். நானும் சம்மதித்தேன். இரு ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

நடைமுறை வாழ்க்கை பிரச்சினைகளை கூறி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது முடிவில் தெளிவாக இருந்தேன். அவரது கள்ளம் கபடமற்ற மன அழகில் மட்டுமே மயங்கினேன். இதை பெற்றோரிடம் எடுத்துக் கூறியபோது சம்மதித்தனர். இறுதி மூச்சு உள்ளவரை எங்கள் காதல் வாழும்’ என்றார்.

சிவகுலதேவியை திருமணம் செய்தது குறித்து ஜெயக்குமார் கூறும்போது, `ஊனமுற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு வழங்கும் 1000 ரூபாயில் குடும்பத்தை நடத்தி வரும் எனக்கு, எதிர்காலம் குறித்து கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால் என்னையும் ஒரு பெண் மனதார காதலித்து திருமணம் செய்திருப்பது வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

ஜெயகுமாரின் அண்ணன் விஜயகுமார் கூறும்போது, `கேள்விக்குறியான எங்கள் வாழ்வு வெள்ளையுள்ளம் கொண்ட இரு பெண்களால் தழைத்துள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x