Published : 25 Mar 2016 08:24 AM
Last Updated : 25 Mar 2016 08:24 AM

2 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியுடன் சந்திப்பு: அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க முடிவு

இரு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று சந்தித்துப் பேசினார்.

நேற்று காலை 11.30 மணி யளவில் கோபாலபுரம் இல்லத் துக்கு வந்த அவர், தந்தை கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பாக அழகிரியிடம் தொலைபேசியில் கேட்டபோது, ‘‘எனது தாய், தந்தையரை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கட்சி, அரசியல் என வேறு விஷயங்கள் எதுவும் பேசவில்லை’’ என்றார்.

மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த அழகிரியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதும் அவர்களை அழைத்து கருணாநிதி சமரசம் செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் தனது ஆதர வாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப் பட்டதற்கு நியாயம் கேட்பதற்காக கடந்த 2014 ஜனவரி 24-ம் தேதி கருணாநிதியை சந்தித்தார் அழகிரி. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் திமுகவிலிருந்து அழகிரி தற்காலிக மாக நீக்கப்பட்டார்.

அதன் பிறகு தாயார் தயாளு அம்மாளை சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்கு பலமுறை வருகை தந்த அவர், கருணாநிதியை சந்திக்கவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கருணா நிதியை அழகிரி சந்தித்துள்ளது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நிருபர்களிடம் கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், தாய், தந்தையரை பார்ப்பதற்காக அழகிரி வந்து சென்றார். இந்த சந்திப்புக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை. இதனை வைத்து ஊடகங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றார்.

மீண்டும் இணைய திட்டமா?

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பேசி வந்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் அழகிரியை சந் தித்து ஆதரவு கோரினார். இது திமுக வேட்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அழகிரி, ‘‘திமுக வுக்கும், காங்கிரஸுக்கும் கொள் கையே கிடையாது. வரும் தேர்த லில் திமுக தோற்பது உறுதி. மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் ஒரு நகைச்சுவை பயணம்’’ என கடுமையாக விமர்சித்திருந் தார். இது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கருணா நிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘அழகிரி செய்து வரும் துரோகங் களுக்கு எனது பெயரைப் பயன் படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவரையும், அவரது பேச்சுகளை யும் திமுகவினர் அலட்சியப்படுத்த வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு அமைதியாக இருந்த அழகிரி நேற்று கருணாநிதியை சந்தித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இந்நிலையில் திமுகவை பலப்படுத்த அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சிகள் நடப்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே கருணாநிதி - அழகிரி சந்திப்பு நடந்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘கருணாநிதி - அழகிரி சந்திப்பு என்பது தந்தை - மகன் சந்திப்பு மட்டுமே. அவரை மீண்டும் திமுகவில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.

துரோகிகள் பட்டியல்

கருணாநிதி - அழகிரி சந்திப் பில் அரசியல் இல்லை என்று இருதரப்பிலும் மறுப்பு வந்தாலும் சட்டப்பரவைத் தேர்தல் குறித்தே இருவரும் பேசியதாகக் கூறப் படுகிறது.

“எனது ஆதரவாளர்கள் யாருக் கும் தொகுதிகள் வேண்டும் என நான் கேட்கமாட்டேன். அதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங் கள். ஆனால், கட்சியில் துரோகம் செய்யும் பலர் இருக்கின்றனர். பணம் கொடுத்தால் சீட்டு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அவர்களின் பட்டியலை தருகிறேன். அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர வேண்டாம்” என அழகிரி கேட்டுக் கொண்டதாக திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனால் திமுகவில் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x