Last Updated : 13 May, 2014 10:33 AM

 

Published : 13 May 2014 10:33 AM
Last Updated : 13 May 2014 10:33 AM

1,144 மார்க்: மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளி சாதனை: பிளஸ் 2-வில் 7 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, கல்வியைத் தொடர்ந்தவர்களில் இந்த ஆண்டு 7 பேர் பிளஸ் 2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுளளனர்.

குடும்ப வறுமை காரணமாக சிறுவர்கள் பலர் கல்வியை பாதியி லேயே விட்டுவிட்டு, வேலைக்கு செல்லும் நிலை நாடு முழுவதும் உள்ளது. அத்தகைய குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு தொடர்ந்து கல்வி அளிப்பதற்காக சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சிறப்புப் பள்ளிகளில் சில ஆண்டுகள் பயின்ற பின்னர், மீண்டும் அவர் கள் வழக்கமான பள்ளிகளில் சேர்க் கப்பட்டு பயில்கின்றனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் களுக்காக தற்போது 330 சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 11 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சிறப்புப் பள்ளிகளில் பயின்று பின்னர் வழக்கமான பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களில் இந்த ஆண்டு 480 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களில் 465 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரில் நெசவுக் கூடம் ஒன்றில் குழந்தைத் தொழிலாளி யாகப் பணியாற்றிய எஸ்.கோபால், கடந்த 2007-ம் ஆண்டு அங்கிருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்புகளை முடித்த அவர், 2009-ம் ஆண்டு வெண்ணாந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். தற்போது பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1,144 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதத்தில் 195, உயிரியலில் 196, வேதியியலில் 197 மற்றும் இயற்பியலில் 198 என அபரிதமான மதிப்பெண்களை இந்த மாணவர் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் கோபால் கூறியதாவது:ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியவில்லை. அதனால் நெசவுக் கூடத்துக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு வேலை மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்போது பள்ளிக் குச் செல்லும் மாணவர்களைப் பார்த்து ஏங்கியுள்ளேன். இந்தச் சூழலில்தான் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், என்னை நெசவுக் கூடத்திலிருந்து மீட்டு, கல்வி அளித்தனர். அந்த சிறப்புப் பள்ளி மட்டும் அப்போது எங்கள் ஊரில் தொடங்கப்படவில்லை எனில், எனது வாழ்க்கையில் இந்த திருப்புமுனை ஏற்பட்டே இருக்காது.

வறுமையின் கொடுமையால் தான் சிறுவர்கள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். பெற்றோர், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித் தாலும் தங்கள் பிள்ளைகளின் படிப்பை மட்டும் நிறுத்தி விடக் கூடாது. எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பல் மருத்துவம் அல்லது கால்நடை மருத்துவம் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து பயில விரும்புகிறேன்.

இவ்வாறு கோபால் கூறினார்.

சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் இருந்து 2001-ம் ஆண்டு மீட்கப்பட்ட எஸ்.மகாலட்சுமி, சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பிளஸ் 2 தேர்வில் 1,068 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பி.காம். படிப்பில் சேரவுள்ளதாக கூறும் அவர், எதிர் காலத்தில் ஆடிட்டராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த கூலித் தொழி லாளி குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயந்தி, விருதுநகர் மாவட்டத் தில் செங்கல் சூளையில் பணியாற்றி யபோது மீட்கப்பட்டு, பள்ளிக்கு கொண்டு வரப்பட்டவர். இவர் 1,053 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செங்கல் சூளையிலிருந்து மீட்கப் பட்ட டி.சேர்வரன் 1,036 மதிப்பெண் களையும், நாமக்கல் மாவட்டத்தில் நெசவுக் கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட ரூபாதேவி 1,031 மதிப் பெண்களையும், ஏ.ஜீவா 1,006 மதிப்பெண்களையும், விருதுநகரில் பட்டாசு ஆலையிலிருந்து மீட்கப் பட்ட கே.மோகன்ராஜ் 1,027 மதிப்பெண்களையும் பெற்றுள்ள னர். இவர்களைத் தவிர 900 மதிப் பெண்களுக்கும் மேல் 12 பேர் பெற்றுள்ளனர்.

குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, பின்னர் கல்வியைத் தொடரும் மாணவர் களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கல்லூரி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x