Published : 01 Apr 2017 09:26 AM
Last Updated : 01 Apr 2017 09:26 AM

10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது

மயக்க குளிர்பானம் கொடுத்து பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டியது அம்பலம்



பள்ளி தாளாளரின் பாலியல் தொந்தரவால் 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, மாணவியிடம் பலமுறை தவறாக நடந்துகொண்ட தாளாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்பேட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 29-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. தன் சாவுக்கு சரவணன் என்பவர்தான் காரணம் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. மாணவியை சரவணன் பலாத்காரம் செய்ததும், இந்த விரக்தியில்தான் மாணவி தீக்குளித்து இறந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கோயம்பேட்டை சேர்ந்த சரவணனை (42) போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார்.

இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார்.

வீடியோவை காட்டி மிரட்டல்

மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை. வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார்.

இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர்.

ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

எச்சரித்தும் பலனில்லை

மாணவியின் பெற்றோர் கூறிய போது, ‘‘சரவணன் படித்தவர். பள்ளி தாளாளர். அவர் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வார் என்று நினைக்கவில்லை. மகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்று தெரிந்ததும், எச்சரித்தோம். மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சினார்.

அதன் பிறகும், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத் தவர், கடைசியில் எங்கள் மகள் இறப்புக்கு காரணமாகி விட்டார்’’ என்றனர்.

தற்கொலைக்கு தூண்டுதல், சிறுமியை பலாத்காரம் செய்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘சரவணனை சும்மா விடக்கூடாது’

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு மாணவி எழுதிவைத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அப்பா, அம்மா, தாத்தா.. நீங்க கஷ்டப்படக்கூடாது. நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கணும். என்னால உங்களுக்கு ஒரு வாய் சோறுகூட போட முடியல. நா உங்களுக்காக எதுவும் பண்ணல. அம்மா என்ன மன்னிச்சிருங்க. நா போறேன். நா எப்போதும் உங்க கூடவேதான் இருப்பேன். என்னோட சாவுக்கு சரவணன்தான் காரணம். அவரை சும்மா விடக்கூடாது. நா ரொம்ப கஷ்டத்தோட சாவப்போறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு தூண்டுதல், சிறுமியை பலாத்காரம் செய்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x