Published : 16 Aug 2016 01:53 PM
Last Updated : 16 Aug 2016 01:53 PM

10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி!

அனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இச்செயலியின் சிறப்பம்சங்கள்

* ஆன்ட்ராய்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி இயங்க இணைய வசதி தேவையில்லை. ஒரு முறை பதிவிறக்கிக்கொண்டால் மட்டுமே போதுமானது.

* அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகத்தில் உள்ள 1 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

* ஒவ்வொரு முறை பயிற்சியைத் தொடங்கும்போதும் பாடங்களில் உள்ள கேள்விகளின் வரிசைமுறைகள் தானாகவே மாறிவிடும். இதே போன்று விடைக்குறிப்புளும் (Shuffle) மாறும்.

* முக்கிய வினாக்களை, குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும் வினாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனியே பயிற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடும் வகையில், புக்மார்க் வசதி செய்யப்பட்டுள்ளது.

* கணிதக் கேள்விகளுக்கு, பென்சில் பொத்தானை அழுத்தி தேவையான கணக்கை அலைபேசியிலேயே போட்டுப் பார்த்து விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

* மாணவர்கள் சரியான விடையைத் தேர்வு செய்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடையைத் தேர்வு செய்தால் சிவப்பு நிறத்திலும் சுட்டிக்காட்டும்.

* பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பயிற்சி பெற்ற பாடம், தலைப்பு, மதிப்பெண் விவரம் போன்றவை சுட்டிக்காட்டப்படும்.

முழுமையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கைத்தட்டல் சத்தம் கிடைக்கும். வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மரக்கோப்பை, வெள்ளிக்கோப்பை மற்றும் தங்கக்கோப்பைகள் காட்டப்பட்டு மாணவர்கள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவர்.

* மாணவர்கள் தேர்வெழுதிய நேரம், பாடம், பெற்ற மதிப்பெண் விவரம் போன்றவை அனைத்தும் தானாகவே சேமிக்கப்பட்டு விடுவதால் ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.

* மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை குறுஞ்செய்தி, ஈமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர முடியும்.

* தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்த்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட வினா விடைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆறு மாத உழைப்புக்குப் பிறகு தான் உருவாக்கிய செயலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் மதன் மோகன்,

''கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெற பயிற்சி அளித்து வருகிறோம். அப்போது நன்றாகப் பயிலும் மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினாக்களில் தவறு செய்து 98 அல்லது 99 மதிப்பெண்கள் பெற்று சதத்தை தவற விடுகின்றனர். அதேபோன்று கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மாணவர்களுக்கு அலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்துகொண்டேன்.

அதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என யோசித்து, மாணவர்களுக்கு பிடித்த அலைபேசி விளையாட்டு போன்ற இந்த செயலியை உருவாக்கினேன். செயலி உருவாக்கத்தில் உதவிகள் செய்த தொழில்நுட்ப நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த உயரதிகாரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

செயலியைப் பதிவிறக்கம் செய்ய ப்ளே ஸ்டோர் இணைப்பு: >பத்தாம் வகுப்பு செயலி

தொடர்புக்கு: ஆசிரியர் மதன் மோகன் - 9952787972

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x