Published : 30 Jun 2016 10:25 AM
Last Updated : 30 Jun 2016 10:25 AM
தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் படையெடுக்கும் இக்காலத்தில், புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசுப் பள்ளியை புதுப்பித்து, மாணவர் சேர்க்கையில் ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிக் காட்டியுள்ளனர்.
அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குளம் தெற்கு ஊராட்சி வல்லம்பக்காட்டில் 1987-ல் தொடங்கப்பட்ட இந்த ஈராசிரியர் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப் படியாகக் குறைந்து கடந்த 2013-14ல் 21 பேர் மட்டுமே படித்துள்ளனர். இதனால் இப்பள்ளியைப் பூட்டப்போவதாக அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுப் பள்ளியைத் தக்க வைப்பது குறித்து ஊர் பிரமுகர்கள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் சில முடிவு கள் எடுக்கப்பட்டு அவை நிறை வேற்றப்பட்டன. இதனால், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் இந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
இதுகுறித்து பள்ளியின் பெற் றோர், ஆசிரியர் கழகத் தலைவர் பி.எம்.கணேசன் கூறியதாவது: சுமார் 900 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் 2 பேரைத் தவிர வேறு யாரும் 10, 12-ம் வகுப்புகளுக்கு மேல் படித்தது கிடையாது. இத னால் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகள் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டுமென கருதி, அவர் களைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியதால் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது.
இதைக் காரணம் காட்டி கடந்த 2013-ல் பள்ளியை அரசு மூட உள்ளதாக அப்போதிருந்த பள்ளித் தலைமை ஆசிரியர், எங்களிடம் கூறினார். இதையடுத்து மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி தலைமையில் கிராமத்தினரை அழைத்து ஆலோசித்தோம்.
தனியார் பள்ளிகளுக்கு இணை யான வசதிகளையும், தரமான கல்வியையும் அளித்தால் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதாக பெற்றோர் உறுதியளித் தனர்.
இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டினரிடமும் இருந்து நன்கொடையாக வசூலித்த மொத்தம் ரூ.5.50 லட்சத்தில் 2 வகுப் பறைகளிலும் ஏ.சி., மின்விசிறி களைப் பொருத்தினோம். சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளை ஏற்படுத்தியதுடன், கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினோம்.
அதன்பிறகு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தேவை என்ற கோரிக்கையை ஏற்று, பள்ளியின் அருகே இருந்த அங்கன்வாடி மையத்திலும் இடவசதி குறைவாக இருந்ததால், கூடுதலாக ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டினோம்.
அங்கும், மின்விசிறிகளைப் பொருத்தினோம். குடிநீர், கழிப்பறை கள், சிமெண்ட் நடைபாதை ஆகியவற்றை அமைத்தோம். குழந்தைகளைக் கண்காணிக்க பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் தலா ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் 2 ஆசிரியர்களை நியமித்துள்ளோம்.
அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக சீருடையுடன் பெல்ட், காலணி, ஐ.டி. கார்டு வழங்கு கிறோம். இதனால், தற்போது அங்கன்வாடியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 37 குழந்தைகளும், பள்ளியில் 79 மாணவர்களும் பயில்கின்றனர்.
மாணவர்கள் எண்ணிக்கை அதி கரித்துள்ளதால் கூடுதலாக ஒரு ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள் ளோம். கடந்த 2 ஆண்டுகளாக இங்கிருந்து எந்த மாணவர்களை யும் தனியார் பள்ளிகளில் சேர்க்காததால் இந்த ஊருக்குள் தனியார் பள்ளி வாகனங்களின் வருகை குறைந்துவிட்டது என்றார்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் டி.ராமு கூறியபோது, “மிகவும் பின்தங்கியுள்ள இக்கிரா மம், கல்வியால் வளர்ச்சி அடைய வேண்டுமெனக் கருதி இங்குள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுப் பதால் மாணவர் சேர்க்கையிலும், தரமான கல்வியை அளிப்பதிலும் முன்மாதிரிப் பள்ளியாக இப்பள்ளி மாறியுள்ளது” என்றார்.
மக்கள் ஒன்றிணைந்தால் அரசுப் பள்ளிகளில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை இந்த கிராம மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT