Published : 28 Dec 2016 11:32 AM
Last Updated : 28 Dec 2016 11:32 AM

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்: ஜன.8-ல் பரமபத வாசல் திறப்பு

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இவ்விழா இன்று இரவு 7 மணிக்கு கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து பகல்பத்து திருநாள் வரும் 29-ம் தேதி தொடங்கு கிறது. பகல்பத்து திருநாட்களில் உற்சவரான நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து தினமும் ஒவ் வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்துக்குச் சென்று பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா (பரமபத வாசல் திறப்பு) ஜனவரி 8-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அன் றைய தினத்தில் இருந்து ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து திருநாளில் ஜன.14-ம் தேதி திருக்கைத்தல சேவை, ஜன. 15-ம் தேதி வேடுபறி, ஜன.17-ம் தேதி தீர்த்தவாரி, ஜன.18-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பொ. ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x