Published : 25 Mar 2016 09:01 PM
Last Updated : 25 Mar 2016 09:01 PM

ஷரீஅத் சட்ட விவகாரம்: மணிஷ் திவாரிக்கு முஸ்லிம் லீக் கண்டனம்

முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முஸ்லிம் ஷரீஅத் சட்டம் இறைவனால் உருவாக்கப்பட்டது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதன் தெய்வீகத்தன்மையை இந்தச் சட்டத்தை நம்புபவர்களால் மட்டுமே கணிக்க முடியும்.

ஆனால், ஷரீஅத் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. முஸ்லிம் அல்லாத திவாரி, முஸ்லிம்களின் தெய்வீக ஷரீஅத் சட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்திருக்க வேண்டும். பொது சிவில் சட்டம் என்பது இந்திய சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும். எனவே, அதனை ஏற்க முடியாது'' என்று காதர் மொய்தீன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x