Last Updated : 26 Sep, 2016 11:01 AM

 

Published : 26 Sep 2016 11:01 AM
Last Updated : 26 Sep 2016 11:01 AM

8 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: பிஎஸ்எல்வி சி35 புதிய சாதனை- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் மூலம் இருவேறு சுற்றுப்பாதைகளில் நேற்று வெற்றிகரமாக நிலைநிறுத் தப்பட்டன. இதன்மூலம் இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.

நம் நாட்டின் சொந்த தேவைகளுக்காக மட்டுமின்றி, வணிகரீதியாகவும் செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் மூலம் நேற்று காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

முதலில், திட்டமிட்ட சுற்றுப் பாதையில் ‘ஸ்காட்சாட்-1’ செயற்கைக் கோள் 17-வது நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. பிறகு, ராக்கெட்டின் இன்ஜின் 2 முறை மறுஇயக்கம் செய்யப்பட்டு இன்னொரு சுற்றுப்பாதையில் மற்ற 7 செயற்கைக் கோள்களும் காலை 11.25 மணி முதல் 11.28-க்குள் அடுத்தடுத்து நிலைநிறுத்தப்பட்டன. இருவேறு சுற்றுப்பாதைகளில் பயணிக்க வேண்டி இருந்ததால் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டின் மொத்த பயண நேரம் 2.15 மணி நேரமாக இருந்தது.

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 8 செயற்கைக் கோள்களில் முதன்மையானது இஸ்ரோவின் தயாரிப்பான ‘ஸ்காட்சாட்-1’. இது பருவநிலை தொடர்பான ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு, புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இது 371 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 724 கி.மீ. தொலைவில் துருவ சூரிய ஒத்தியங்கு சுற்றுப்பாதையில் இது நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள்.

மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள ‘பிரதம்’ (10 கிலோ), பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ (5.25 கிலோ), அல்ஜீரியாவின் அல்சாட் - 1பி (130 கிலோ), அல்சாட் - 2பி (117 கிலோ), அல்சாட் - 1என் (7 கிலோ), அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் - 1 (44 கிலோ), கனடாவின் என்எல்எஸ்-19 (8 கிலோ) ஆகிய 7 செயற்கைக் கோள்களும் பூமியில் இருந்து 689 கி.மீ. தொலைவில் துருவ வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி:

செயற்கைக் கோள்கள் ஒவ்வொன்றாக அவற்றின் சுற்றுப் பாதைகளில் நிலைநிறுத்தப் பட்டதும், சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் குழுமியிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில், ‘‘நவீன வானிலை செயற் கைக் கோள் உள்ளிட்ட 8 செயற் கைக் கோள்களை நமது விண் வெளி விஞ்ஞானிகள் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தி, இருவேறு வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இதன்மூலம் இஸ்ரோவின் வரலாற்று சாதனை களை அவர்கள் மீண்டும் தக்க வைத்துள்ளனர். இத்தகைய புதுமை யான திட்டங்கள் மூலம், 125 கோடி இந்தியர்களின் மனதில் இடம்பிடித்ததுடன், இந்தியாவை உலக அளவில் புகழ்பெறச் செய்துள் ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x