Published : 12 Nov 2016 06:24 PM
Last Updated : 12 Nov 2016 06:24 PM
'நாடு முழுவதும் உள்ள ரூ.400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதா?' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியிலிருந்து சனிக்கிழமை சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கறுப்புப் பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளும் ஒழிக்கப்படும் எனக் கூறி ஒரே இரவில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதன் மூலம் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும்? நாடு முழுவதும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 86 சதவீதம் 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக உள்ளன. அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளில் 86 நோட்டுகளை திடீரென முடக்கியுள்ளனர்.
ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.400 கோடி மட்டுமே கள்ள நோட்டுகள் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. ரூ.400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க 17 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை முடக்குவது எப்படி நியாயமாகும்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்குக் கூட பணமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது'' என்று ப.சிதம்பரம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT