Published : 06 Nov 2014 10:27 AM
Last Updated : 06 Nov 2014 10:27 AM

‘மேஜிக்’ நடத்தும் 90 வயது தாத்தா: சர்க்கஸ் கோமாளியாக வலம் வந்தவருக்கு கை கொடுக்கும் கலை

சர்க்கஸில் கோமாளியாக வலம் வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த 90 வயது முதியவர் தனது முதுமைக்காலத்தில் 2 மணி நேரம் நின்றுகொண்டே, மேஜிக் ஷோ நடத்தி வருகிறார்.

சின்னஞ்சிறு குழந்தைகள் அந்த முதியவரைக் கண்டால் அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கி றார்கள். தன்னுடைய கலையின் இடையிடையே அவர் செய்யும் கோமாளித்தனமான கூத்துக்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

கோயில் விசேஷங்களில் தொடங்கி, பள்ளி ஆண்டு விழா வரை மேஜிக் செய்து கலக்கி வருகிறார் நாகர்கோவில், இளங்கடையைச் சேர்ந்த நைனாமுகமது(90). அவர் கூறியதாவது:

எனக்கு சொந்த ஊரு திண்டுக்கல். என் சித்தப்பா நாகர்கோவிலைச் சேர்ந்த அப்துல்காதருக்கு குழந்தை இல்லாததால், சின்ன வயசுல என்னை இங்க கூட்டிட்டு வந்து வளர்த்தாரு. நான் வந்த முகூர்த் தம் என் சித்தப்பாவுக்கு 12 குழந்தை கள் பிறந்துடுச்சு. 8 வயசு இருக்கும் போதே நான் நல்லா குட்டிகர்ணம் போடுவேன்.

கோமாளி வேடம்

ஒன்றாம் வகுப்புதான் படிச்சேன். 8 வயசுல ‘குல்முகமது’ சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். பல கம்பெனிகள் மாறி கடைசியா `ஜெமினி’ சர்க்கஸில் வேலை செய்தேன்.

சோறு போடும் கலை

எனக்குக் கோமாளி வேஷம். பாவாடையைக் கட்டிட்டு அந்தரத்தில் இருந்து குதிப்பேன். 70 வயசு வரை இப்படியே இருந்துட்டேன். என் கூட சர்க்கஸில் பணிபுரிந்த கொல் கத்தாவைச் சேர்ந்த ரகுநாத ஐயர்தான் எனக்கு மேஜிக் கற்று கொடுத் தார். அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை, ’உன் கடைசி காலத்தில் இது உனக்கு சோறு போடும்’ என்பது தான். அது இப்போதும் நிஜமாக தொடர்கிறது.

முதுமை காரணமாக சர்க்கஸில் இருந்து வெளியேறியதும், கடந்த 20 ஆண்டாக மேஜிக் ஷோ நடத்திகிட்டு இருக்கேன். எனக்கு 3 ஆண், 4 பெண் குழந்தைகள் உள்ளனர். எல்லோருக் கும் திருமணம் ஆகிவிட்டது. நான் சர்க்கஸில் சிறப்பா செயல்பட்டதால், நியூ பிரகாஷ் சர்க்கஸ் கம்பெனி முதலாளி ஜானம்மாள் எனக்கு இந்த வீட்டை கட்டிக் கொடுத்தாங்க. வீட்டில் என் இளைய மகன் சாகுல் ஹமீதுடன் வசித்து வருகிறேன்.

ஓய்வூதியம் கிடைக்குமா?

சாகுலும் என் கூட தான் மேஜிக் தொழிலுக்கு வந்திட்டு இருக்கான். 4 பேர் சேர்ந்து 2 மணி நேரம் வித்தை காட்டுவோம். சம்பளம் கொடுத்தது போக ஆயிரம் ரூபாய் எனக்கு கிடைக்கும். அதில்தான் என் வாழ்க்கை ஓடுது. சர்க்கஸில் வேலை பார்த்த வயதானவங்களுக்கு கேரள அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. தமிழக அரசும் அப்படி கொடுத்தால், என்னை மாதிரி வயசானவங்க இப்பவும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

நல்ல வரவேற்பு

பள்ளி மாணவர்களிடம் இப்போதும் மேஜிக் கலைக்கு பெரிய வரவேற்பு இருக்குது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 2,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மேஜிக் ஷோ காட்டியிருக்கிறேன். பீடி, சிகரெட், மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்க மும் கிடையாது. அதனால் 90 வயதிலும் ஆரோக்கியமாக 2 மணி நேரம் நின்னுட்டே நிகழ்ச்சி நடத்த முடியுது.

‘அவள் பெயர் தமிழரசி’ திரைப் படத்தில், ‘குச்சு.. குச்சு கூட்ஸ் வண்டியிலே…’ பாடலிலும் ஒரு காட்சி யில் நான் நடிச்சிருக்கேன். வாழ்வின் கடைசி நிமிடம் வரை மேஜிக் நடத்த வேண்டும் என்பது மட்டுமே எனக்கு ஆசை’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x