Published : 14 Jun 2016 03:26 PM
Last Updated : 14 Jun 2016 03:26 PM
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்று சமக தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். மத்திய அரசில் உள்ளவர்களை முதல்வர் சந்திக்காமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளார் என்ற இளங்கோவன், தற்போது முதல்வரின் டெல்லி பயணம் தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகளாக வெளியிடுகிறார்.
தமிழகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததை அவர்களின் தோழமைக் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் பல திட்டங்கள் செயல்வடிவம் பெரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தமிழக மீனவர் , இலங்கை தமிழர் , நதி நீர் பங்கீடு குறித்த நடவடிக்கைகள், கச்சதீவு எனப் பலவிதமான பிரச்னைகளுக்கு மத்திய அரசின் குறிக்கீடு தேவையாக இருக்கும்போது, முதல்வரின் பயணம் குறித்த இளங்கோவனின் கருத்து ஏற்புடையதல்ல. அது கண்டிக்கத்தக்கது'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT