Last Updated : 06 Dec, 2015 11:36 AM

 

Published : 06 Dec 2015 11:36 AM
Last Updated : 06 Dec 2015 11:36 AM

மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற பிரபல எழுத்தாளரின் இறுதிச் சடங்கு: சென்னையில் 4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல்

கடந்த 1-ம் தேதி பிரபல எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் பிரீசர் பாக்ஸ் கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4-ம் தேதி மதியம் எரியூட்டப்பட்டது.

‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவர் பிரபல எழுத்தாளர் விக்கிரமன். ‘அமுதசுரபி’ மாத இதழின் முன் னாள் ஆசிரியரான இவர், கடந்த 1-ம்தேதி மதியம் தனது 88 வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் காலமானார். கழுத் தளவு தண்ணீர் சூழ்ந்த சென்னை - மாம்பலத்தில் இருந்த இவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் விக்கிரமனின் மீது அன்புகொண்ட பலர் மன வேதனை அடைந்தனர்.

விக்கிரமனின் உடலை பாது காக்க ப்ரீசர் பாக்ஸ் கிடைக்காமல், எரியூட்டி இறுதிச் சடங்கு நிகழ்த்த மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் அவதியுற்றதை அவருடைய மகன் கண்ணன் விக்கிரமன் கண்ணீருடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்:

‘‘கடந்த 1-ம்தேதி மதியம் எனது தந்தை விக்கிரமன் இறந்த செய் தியை உற்றார் உறவினர் அனைவ ருக்கும் செல்போன் மூலம் தெரியப் படுத்தினேன். வெளியே மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. இவர் மீது பற்றுக்கொண்டவர்கள் தமிழகமெங்கும் உள்ளனர். அவர் களில் பலர் இவரது இறப்பு செய்தி அறிந்தும் கூட மழை வெள்ளம் கார ணமாக வரமுடியாமல் போனது.

என்னோடு கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். சகோதரரும், சகோதரிகளும் வரும் வரையில் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்ஸுக்காக நாங்கள் அலை யாத இடமில்லை. அப்படியே கிடைத்தாலும் மின்சாரம் இல் லாததினால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது. ஐஸ் பாரும் எங்கும் கிடைக்கவில்லை. 2-ம் தேதி மதியம் எங்களுக்கும் வெளி உலகுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது. செல்போன் இயங்கவில்லை.

எவரையும் தொடர்பு கொண்டு எந்த உதவியும் பெற முடியவில்லை. மின்சாரம் இல்லாததினால் வீடு இருளில் மூழ்கியது. ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் காரணமாக எங்கள் வீடு இருக்கும் மாம்பலம் பகுதியை வெள்ள நீர் சூழ்ந்தது. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று எப்படியாவது உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்ல முயற்சித்தோம். எங்கள் நம்பிக்கை வீணானது.

திருவான்மியூர், கண்ணம்மா பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை இடுகாடுகளைத் தண்ணீர் சூழ்ந்த தால் புதைக்கவும் வழியில்லை. மரபுரீதியாக எரியூட்ட விறகும் கிடைக்கவில்லை. மின்மயானத்தில் எரியூட்டவோ மின்சாரம் இல்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானோம்.

இந்த இக்கட்டானச் சூழலில் ம.நடராசன் மற்றும் தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகர் ஆகிய இருவரும் எங்கள் துயருக்குத் தோள்கொடுத்தனர்.

மயானம் கிடைக்கும் வரையில் உடலை படகு மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று பாதுகாக்க, ம.நடராசனின் உதவியாளர்கள் சென்னையில் இருக்கிற தனியார் மற்றும் அரசாங்க மருத்துவமனை களை எல்லாம் அணுகினர். இறந்து 2 நாள் ஆன உடலை மற்ற உடல்களுடன் வைக்க முடியாது என்று எல்லா மருத்துவமனைகளும் கைவிரித்துவிட்டன.

இதற்கிடையில் 15577 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும் என்று யாரோ சொல்ல, தொடர்பு கொண்டோம். அந்த எண்ணில் இருந்தவர்கள் ‘உங்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கடிதம் வாங்கி வந்துவிடுங் கள். உடலை நாங்கள் பாதுகாப் பில் வைக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷன்… உடலை போஸ்ட் மார்ட்டம் செய்துதான் வைப்போம்’ என்றார்கள். எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி.

சரியென்று மனதை திடப் படுத்திக்கொண்டு… போஸ்ட் மார்ட்டத்துக்கு சம்மதித்து, எங்கள் பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கடிதம் கேட்டோம். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர். அதன் பிறகு திருவல்லிக்கேனியில் இருந்த ‘பென் அண்ட் கோ’ என்கிற தனியார் அமைப்புக்குக் கொண்டுச் செல்ல முயற்சித்தோம். அதுவும் தோல்வி அடைந்தது.

மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு 3-ம் தேதி இரவு ராமசந்திரா மருத் துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸில் விக்கிரமனின் உடலைக் கொண்டுச் சென்றோம். நாங்கள் கொண் டுச் சென்ற ஆம்புலன்ஸிலேயே எம்பார்ம் செய்து உடலை பாது காக்க முன்வந்தார்கள்.

4-ம் தேதி மதியம் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நேரடியாக திருவல்லிக்கேணியில் இருக்கும் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்குக் கொண்டுசென்று பயோகேஸ் முறையில் என் தந்தை விக்கிரமனின் உடலுக்கு எரியூட்டினோம்’’ என்றார்.

54 ஆண்டுகள் ‘அமுதசுரபி’ இதழின் ஆசிரியராக இருந்தவர் விக்கிரமன். கடந்த 19 ஆண்டாக ‘இலக்கிய பீடம்’ எனும் இதழை நடத்திவந்தார். 33 வரலாற்று நாவல்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி யுள்ள இவர் 30 ஆண்டுகளாக அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.

பலரது வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்ட மழை வெள்ளம்… புகழ்பெற்ற ஓர் எழுத்தாளரின் இறுதிப் பயணத்தையும் விட்டு வைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x