Last Updated : 15 May, 2017 10:07 AM

 

Published : 15 May 2017 10:07 AM
Last Updated : 15 May 2017 10:07 AM

மழைநீர் சேமிப்பால் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற அதிகாரி

மதுரையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தனது வீட்டில் மழைநீரைச் சேமித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி, ஒரு லிட்டர் குடிநீரில் 1.5 மில்லி கிராம் வரையில்தான் ப்ளோரைடு இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மழைநீர் போன்ற தரமான நீரைக் குடித்தால் நோய் இருந்தால்கூட விலகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியிலும் அரிதான மழைநீரைச் சேகரித்து சுத்திகரிப்பு செய்து, சமையலுக்கும், குடிக்கவும் பயன்படுத்தி வருகிறார் மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி குணசீலன். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஆலங்குளம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்தது. மாநகராட்சி சார்பில் குடிநீர் ஏற்பாடு செய்யாத நிலையில், அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டியிருந் தது. இந்நிலையில், திருவாரூரைச் சேர்ந்த மழைநீர் சேகரிப்பு பொறியாளர் வரதராஜன் என்பவர் மூலம் மழைநீரைச் சேகரித்து குடிநீராக பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தினோம்.

வறட்சியிலும் அரிதாக பெய்யும்மழைநீரைச் சேகரிக்க கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.60 ஆயிரம் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்றினோம். இதனால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு ஏற்ப சேமித்த பின் எஞ்சிய நீரை ஆழ்துளைக் கிணறுக்கு அனுப்பி நிலத்தடி நீரைத் தக்க வைக்கிறோம். 500 சதுரஅடி மாடியில் விழும் மழைநீரைச் சுத்திகரிக்க மாடியில் ஒரு இயந்திரம் பொருத்தி உள்ளோம். இதற்காக, மாடியில் வெள்ளை சிமென்ட் பூசி சுத்தமாக் கினோம். சுத்திகரிப்பு தொட்டியில் 20 கிலோ சுத்தமான கரித்தூள், சிப்ஸ் கற்களை 4 அங்குலம் கனத்தில் பரப்ப வேண்டும். அதன்மேல் சிறுமணல் பரப்பி, வலைபோல புது வேட்டியை பொருத்த வேண்டும். மழை பெய்யும்போது மாடியில் சேகரமாகும் நீர் குழாய் வழியாக சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று தூய்மைப்படுத்தப்படுகிறது. அதில்

இருந்து இணைக்கப்பட்ட குழாய்மூலம் வீட்டில் சமையல் அறையின் மேல் பொருத்தப்பட்ட 1000 லிட்டர்பைபர் டேங்கில் சேகரிக்கப்படு கிறது. அதில் இருந்து ஒரு குழாய்

வழியாக தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம். டேங்கின் உள்ளே தூசி புகாதவாறு வடிவமைத்தல் அவசியம். சமையலறை டேங்க் நிரம்பிய பின், எஞ்சிய சுத்திகரித்த நீரைத் தரைத்தளத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி வழியாக ஆழ்துளைக் கிணறு குழாய்க்குள் அனுப்பும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

எங்கள் வீட்டில் தரைத்தளத் திலும், மாடியிலும் தலா 1000 லிட்டர் டேங்க் வைத்துள்ளோம். சமீபத்தில் பெய்த மழையால் 2 டேங்குகளும் நிரம்பின. இந்த நீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறோம். ஒரு வீட்டில் இருவருக்கு தினமும் சமைக்க, குடிக்க தலா 20 முதல் 25 லிட்டர் தண்ணீர் போதும். சராசரி மழையை பயன்படுத்தி தேவையான அளவு தண்ணீரைச் சேகரிக்கலாம். குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மழைநீரைக் குடிநீராக்குவது பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஒவ்வொரு வீட்டிலும், தேவைக்கேற்ப மழை நீரைச் சேகரிக்கலாம்.

இயற்கையாக பெய்யும் மழைநீரை வீணாக்காமல் குடிக்கவும்,சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டிடத்துக்கு அருகில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைப்பதைவிட, ஆழ்துளைக் கிணறுக்குள் நேரடியாக மழை

நீரைச் செலுத்துவதால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கிறது. இத்திட்டத்தில் நீர்மூழ்கி மோட்டாருக்கு பதில் கம்ப்ரசர் மின்மோட் டாரை பயன் படுத்தலாம். தேவைக் கேற்ப குறைந்த செலவிலும் அமைக்கலாம்.

புதிதாக வீடு கட்டும்போதே இது போன்ற அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மழைநீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றி கட்டிடப் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைக்க வேண்டும். மக்கள் இயற்கையை பயன்படுத்த பழக வேண்டும். மழைநீரைக் குடிநீராக சேகரிக்க விரும்புவோருக்கு ஆலோசனை தந்து அமைத்துத் தர ஏற்பாடு செய்ய தயார் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x