Published : 04 Aug 2015 08:49 AM
Last Updated : 04 Aug 2015 08:49 AM

மதுவுக்கு எதிராக போராடிய மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட போலீஸார்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸாரின் பிடியில் சிக்கிய மாணவர்களை காப்பாற்ற கல்லூரி மாணவிகளான நிவேதா, வாணி, ஜான்சி, கனிமொழி, ஓவியா ரூபா ஆகியோர் துணிந்து நின்று போராடினர். போலீஸாருடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த போலீஸார் மாணவிகள் மீதும் தடியடி நடத்தினர். பூட்ஸ் காலால் மாணவிகளை எட்டி உதைத்தும், அவர்களின் கைகள் மற்றும் ஆடைகளை பிடித்து இழுத்தும் அநாகரிகமாக நடத்துகொண்டனர். போலீஸாரின் மிரட்டலுக்கு பயப்படாமல் மாணவிகள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நிவேதா என்ற மாணவி மயங்கி விழுந்தார். போராட்டக் களத்தில் போலீஸாரை எதிர்த்து துணிந்து நின்று போராடிய மாணவிகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மயங்கி விழுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் மாணவி நிவேதா கூறியதாவது:

சசிபெருமாள் மரணம் திட்டமிட்டே போலீஸாரால் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் மதுக்கடையை மூடவேண்டும் என்றுதான் அரசிடம் சசிபெருமாள் கோரிக்கை வைத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர்ந்து போராடி வந்தார். ஆனால், அதற்கு இந்த அரசு கொடுத்த பரிசு மரணம்தான்.

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் வரை தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மாணவர்களின் படிப்புக்கு தடையாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினால் போலீஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மதுக்கடையை மூட முடியாது குடித்துவிட்டு சாவுங்கள் என்று போலீஸார் சொல்கின்றனர். திட்டமிட்டே மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துகின்றனர்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே மாணவி நிவேதா மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போலீஸார் பூட்ஸ் காலால் மாணவிகளை எட்டி உதைத்தும், அவர்களின் கைகள் மற்றும் ஆடைகளை பிடித்து இழுத்தும் அநாகரிகமாக நடத்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x