Published : 29 Nov 2014 10:30 AM
Last Updated : 29 Nov 2014 10:30 AM

மதுவுக்கு எதிராக ஒரு மர வியாபாரியின் போராட்டம்: வியக்க வைக்கும் விவேகானந்தன்

கேரள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் விவேகானந்தனும் ஒரு உந்துதலாக இருந்திருக்கிறார். அடிப்படையில் ஒரு மர வியாபாரியான விவேகானந்தன், செங்கோட்டையில் கடந்த 15 ஆண்டுகளாக மகாத்மா காந்தி சேவா மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

தென்னிந்திய காந்தி கிராம நிர்மாண சேவா தளத்தின் தலைவராகவும் இருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் காந்திய கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் தங்களின் சிந்தனை என்று சொல்லும் விவேகானந்தன், மதுவிலக்கு உள்ளிட்ட காந்திய கொள்கைகளை வலியுறுத்தி வெளி மாநிலங்களிலும் நடைபயணம், சைக்கிள் பயணம் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார்.

தனது காந்திய சேவை குறித்து அவரே நம்மிடம் பேசுகிறார். “காந்திய கொள்கைகளை இளைய சமுதாயத்துக்கு போதிக்க இப்போது ஆள் இல்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை, ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்ட பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு காந்திய கொள்கைகளை பயிற்றுவிக்கிறோம். எதிர் கால சமூகமாவது தன்னலமற்ற நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். அரசியல் என்றதும் உங்களுக்கு உடனடியாக என்ன ஞாபகம் வருகிறது? என்று மாணவர்களைக் கேட்டால், `அரசியல் ஒரு சாக்கடை, பணம் பொறுக்கும் இடம்’ இப்படித் தான் பதில் வருகிறது.

இளைய சமுதாயம் அரசியல் மீது அளவு கடந்த வெறுப்பில் இருக்கிறது. அவர் களிடம், `அரசியலை தூய்மைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டால், `காந்தி, காமராஜ், கக்கன் மாதிரியான தலைவர்களை உருவாக்க வேண்டும்’ என்கிறார்கள். கேரள முதல்வர் உம்மன் சாண்டியை 4 மாதங்களுக்கு முன்பு சந்தித்து, `காந்தியவாதியான நீங்கள் காந்திய கொள்கைப்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்திப் பாருங்கள். குற்றங்களின் எண்ணிக்கை தானாக குறைந்து விடும்’ என்று கோரிக்கை வைத்தோம். அடுத்த சில நாட்களில் கேரளத்தில் 400 மதுபான `பார்’களை மூட உத்தரவிட்டார் கேரள முதல்வர். அதற்கு நன்றி சொல்வதற்காக அவரை நாங்கள் மறுபடி சந்தித்தபோது, ‘இன்னும் 400 ‘பார்’ களை மூட இருக்கிறோம். கேரளத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவோம்’ என்று சொன்னார்.

இதேபோல் புதுச்சேரி முதல்வரை யும் சந்தித்து கோரிக்கை வைத்தோம். திமுக தலைவர் கருணாநிதியிடம், ‘திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவ தாக அறிவியுங்கள்; தாய்மார்கள் உங்களை ஆதரிப்பார்கள்’ என்று சொன்னோம். தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மதுவிலக்கு பிரச்சாரம் செய்தபோது எங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் இப்போது, ‘உங்கள் லட்சியம் நிச்சயம் நிறைவேறும்’ என்கிறார்கள்.

இது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.’’ பெருமிதத்துடன் சொன் னார் விவேகானந்தன். ‘காந்திய அமுதம்’ என்ற மாத இதழ் நடத்தி காந்திய சிந்தனைகளை பரப்பி வரும் விவேகானந்தன், 1500 பேருக்கு அந்த இதழை இலவசமாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

மேலும், செங்கோட்டையைச் சுற்றியுள்ள 9 கிராமங்களைச் சேர்ந்த முதியவர்கள் 110 பேரை தத்து எடுத்திருக்கும் விவேகானந்தன், ஆதரவற்ற நிலையில் உள்ள இவர்களுக்கு கடந்த 14 ஆண்டு களாக ஒவ்வொரு வாரமும் அரிசி, பருப்பு, கைச்செலவுக்கு பணம், மருத்துவ உதவி, உடைகள் உள்ளிட்ட வைகளையும் தனது சொந்தச் செலவில் வழங்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x