Published : 26 Nov 2015 09:25 AM
Last Updated : 26 Nov 2015 09:25 AM

மதுரை வழக்கறிஞர் தற்கொலை முயற்சி: டிஎஸ்பி விஷ்ணுப்ரியா வழக்கில் ‘திடீர்’ திருப்பம்

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அழைத்து விசாரித்த மதுரை வழக்கறிஞர் மாளவியா நேற்று விஷம் குடித்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை லேக் ஏரியாவை சேர்ந்தவர் வழக்கறிஞர் மாளவியா (35). திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இவரை அழைத்து விசாரித்தனர். விஷ்ணுப்ரியாவும், மாளவியாவும் செல்போனில் பலமுறை பேசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை போலீஸார் பெற்றனர். இந்த வழக்கில் மாளவியாவின் செல்போன் பேச்சுகள் முக்கிய ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. போலீஸார் விசாரணையால் அதிருப்தி அடைந்த மாளவியா, விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்பிக்கவிட்டு, தன்னை குற்றவாளியாக்க போலீஸார் முயல்வதாக குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில், வீட்டில் விஷம் குடித்த நிலையில் மாளவியா நேற்று மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாளவிகாவின் தற்கொலை முயற்சி, டிஎஸ்பி விஷ்ணுப்ரியா வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x