Published : 30 Oct 2014 03:42 PM
Last Updated : 30 Oct 2014 03:42 PM
போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவர்கள் 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14-ம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான அனில் சில்வா, ஷராஃபி மொஹிதீன், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT