Published : 16 Nov 2015 04:23 PM
Last Updated : 16 Nov 2015 04:23 PM
கனமழை சேதத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று சென்னை - ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மழை - வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரிடம் நிவாரணப் பணி விவரங்களை கேட்டறிந்தார். நிவாரண உதவிகள் விரைவில் கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார்.
ஆர்.கே நகர் தொகுதியில் வண்ணாரப்பேட்டை வீரராகவன் தெரு சந்திப்பில் பொதுமக்களிடையே ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''உங்களுக்கு நான் துணையாக இருப்பேன். எனது தலைமையிலான அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டேன். என் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றவுடன் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டேன்.
மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்தது. நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் சில சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
ஆர்.கே.நகரில் 48 இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுகாதாரமான குடிநீர், உணவு, மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் அமைச்சர்கள் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை சேதத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
என்னென்ன நிவாரணப் பணிகள் தேவையோ அதை அரசு நிச்சயம் செய்யும். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எந்த சிரமமும் இல்லாமல் நீங்கள் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT