Published : 13 Jul 2016 07:49 AM
Last Updated : 13 Jul 2016 07:49 AM

புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்

சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்தது

சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை புழல் சிறையில் நேற்று நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. சுவாதியின் தந்தையும், கொலையை நேரில் பார்த்த சாட்சி யான நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்.

அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய நீதிபதி, சிறையில் அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு குறித்த விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பொறியாளர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். கண்காணிப்பு கேமரா காட்சி களின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை யினர், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமாரை (24) கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கைது செய்தனர். அப்போது, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராம்கு மாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சிலர் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று கூறினர்.

நீதிபதி நியமனம்

இந்நிலையில், சாட்சிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் மனு செய்தனர். அடையாள அணிவகுப்பு நடத்த சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் புழல் சிறைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தார்.

சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவக்குமார் ஆகியோர் சுவாதி கொலையில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் காரில் சிறைக்கு வந்தனர். நீதிபதி உட்பட அனைவரையும் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் சிறைக்குள் அழைத்துச் சென்றார்.

ராம்குமார் போல பலர்

புழல் சிறையில் காலை 10.45 மணி அளவில் நீதிபதி சங்கர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது. ராம்குமாருடன், அவரைப் போலவே உருவம், நிறம், உயரம், எடை, ஆடை அணிந்த நபர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். சுவாதியின் பின்னால் தொடர்ந்து சுற்றியது யார் என்று அடையாளம் காட்டும்படி அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனிடம் கூறப்பட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை நடத்தும் சிவக்குமார், கொலையை நேரில் பார்த்த சாட்சி என்பதால், கொலை யாளியை அடையாளம் காட்டு மாறு அவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் குற்றவா ளியை அடையாளம் காட்டினர்.

விரைவில் விசாரணை அறிக்கை

அடையாள அணிவகுப்பை முடித்துவிட்டு சிறையில் இருந்து நீதிபதி சங்கர் பகல் 12.45 மணி அளவில் வெளியே வந்தார். அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘இந்த அடையாள அணிவகுப்பு, முறைப்படி நடத்துவதுதான். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் இதுதொடர்பாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளன. அதன்படி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்தார். சிறையில் அவர் நலமாக இருக்கிறார். அடை யாள அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம், விசாரணை விவரங்களை வெளியிட முடியாது. விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

‘சுவாதி யார் என்றே தெரியாது’: ராம்குமார்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், மனோகரன், மரிய ஜான்சன் உட்பட 8 பேர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்பை போலீஸார் கண்காணித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் கூறியதாவது:

புழல் சிறைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு சென்றோம். போலீஸார் ராம்குமாரை மாலை 5 மணிக்கு அழைத்து வந்தனர். மாலை 5.30 மணி வரை ராம்குமாருடன் பேசினோம். அப்போது, ‘எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுவாதியுடன் நான் பழகவில்லை. சுவாதி யார் என்றே எனக்கு தெரியாது’ என ராம்குமார் தெரிவித்தார்.

மேலும், ‘வீட்டின் இருட்டு அறையில் இருந்தபோது என்னை சிலர் பிடித்தனர். என்னுடைய கழுத்தை அறுத்தனர். கழுத்தை அறுத்த நபரின் முகத்தை பார்க்க முடியவில்லை. அம்மா, அப்பாவை பார்க்க வேண்டும். பேசமுடியாத நிலையில் இருந்தபோது, என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கிவிட்டனர். கையெழுத்தும் வாங்கினார்கள்’ என்றும் ராம்குமார் தெரிவித்தார்.

ராம்குமார் இன்னும் சோர்வாகத்தான் காணப் படுகிறார். அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை. அவரது கழுத்துப் பகுதியில் போடப்பட்ட 18 தையல்கள் பிரிக்கப்படவில்லை. ராம்குமார் நிரபராதி. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறைய உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x