Published : 25 Jan 2017 03:28 PM
Last Updated : 25 Jan 2017 03:28 PM

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தில் தங்கவேலு-சரோஜா தம்பதியரின் மகனாக பிறந்த மாரியப்பன், சிறு வயதில் பஸ் விபத்தில் கால் ஊனத்துக்குள்ளானார். பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரையில் மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான தடகளப் போட்டி யில் தங்கம் வென்றார். வட அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த சர்வதேச தடகளப் போட்டி யில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இவ்வாறாக சர்வதேச அளவிலான மாற்றுத்திற னாளிகளுக்கு நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கம் வாங்கி குவித்த மாரியப்பன், பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

தற்போது நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் புதன்கிழமை மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இதில் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x