Published : 07 Dec 2014 04:59 PM
Last Updated : 07 Dec 2014 04:59 PM

நேதாஜி கோப்புகளை வெளியிட வலியுறுத்தி டிச.23-ல் வைகோ ஆர்ப்பாட்டம்

நேதாஜி குறித்த அனைத்துக் கோப்புகளையும் வெளியிட மறுத்த மத்திய அரசின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும், பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இம்மாதம் 23 ஆம் தேதி சென்னையில் தனது தலைமையில் மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலைக்காக அகிலம் வியக்கப் போராடிய ஒப்பற்ற தலைவர் நேதாஜி 1945 ஆகஸ்ட் 18 இல் விமான விபத்தில் இறந்ததாக நான்கு நாட்கள் கழித்து ஜப்பான் அரசு அறிவித்த செய்தி உண்மை அல்ல.

ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீசி ஜப்பான் சரண் அடைந்ததற்குப் பிறகு,நேதாஜி நேச நாடுகளின் பிடியில் சிக்காமல் தப்பித்துச் செல்ல முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. அதனால்தான், விமானப் பயணத்தின்போது விபத்து ஏற்பட்டுத் தான் மடியக்கூடும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுத் தெரிவித்து இருக்கிறார்.

தைகோகு விமான தளத்தில் விமானம் ஆகஸ்ட் 18 பிற்பகல் 2.30 க்கு விபத்துக்குள்ளானதாகவும், இராணுவ மருத்துவமனையில் நேதாஜி அன்று இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் உயிர் நீத்ததாகவும், ஜப்பானிய அதிகாரிகள் கூறினர். ஆனால் மற்றொரு முக்கிய அதிகாரி கொடுத்த பிரமாண வாக்குமூலத்தில் இரவு 11 மணிக்கு இறந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார்.

நேதாஜியின் உடல் வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சவப்பெட்டியின் நீளம், நேதாஜியின் உயரத்திற்குப் பொருத்தமாக இல்லை.

நேதாஜி 1941 ஜனவரி 16 இல் கொல்கத்தா வீட்டில் இருந்து ஆப்கானிஸ்தானத்துக் காபுல் வழியாக ஜெர்மனிக்குத் தப்பிச்சென்றபோது, காபுலில் அவருக்கு உதவிய உத்தம்சந்த் மல்கோத்ரா, மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு எல்லையில், கூச் பீகாரில் சோமரி என்னும் இடத்தில் இருந்த மடத்தில், சாரதானந்தாஜி என்ற பெயரில் தலைமை மடாதிபதியாக இருந்தவர் நேதாஜிதான் என்று, அந்த ஆசிரமத்திற்குப் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லி இருக்கின்றார்.

அந்த ஆசிரமம் கண்காணிக்கப்பட்டதாகவும், சாரதானந்தாஜியை எந்தக் கட்டத்திலும் படம் எடுக்க முடியவில்லை; அவர் பூஜைகள் செய்வதையும் பார்க்க முடியவில்லை; புகை மண்டலத்திற்குள்ளேதான் அவரைப் பார்க்க முடியும்; எந்தப் பொருளைத் தொட்டாலும் கைகளில் துணியைச் சுற்றிக்கொண்டுதான் தொட்டார்; தன் விரல் ரேகைகள் எதிலும் படாதவாறு கவனமாக இருந்தார் என்று, 1964 செப்டம்பர் 11 தேதியிட்ட இந்திய அரசின் உளவுத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலாளராகப் பணி ஆற்றிய ஜர்னயில்சிங், ‘நேதாஜி பற்றிய முக்கிய ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் அழிக்கப்பட்டன’ என்று கூறியதாக ஒரு ஆவணம் தெரிவிக்கிறது.

கோப்பு எண் 12 (226) 56-பிஎம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த விசாரணையைப் பற்றிய ஆவணம் என்றும், 1972 இல் அழிக்கப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார். எதற்காக இந்தக் கோப்புகள் அழிக்கப்பட்டன என்பதற்கு எந்தக் காரணமும் பதிவு செய்யப்படவில்லை.

கோப்பு எண் (381-60-66) நேதாஜியின் ஈமச்சாம்பலைக் கொண்டு வருவது குறித்தது. கோப்பு எண் (64)66-70: நேதாஜியின் மரணம் குறித்த சூழ்நிலைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு குறித்த கோப்பு ஆகும்.

இந்த இரண்டு கோப்புகளும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணமல் போய்விட்டன என்று ஜர்னயில்சிங்கின் பிரமாணப் பத்திரம் கூறுகிறது.

நேதாஜி மறைவு குறித்து விசாரிப்பதற்காக நேரு காலத்தில் அமைக்கப்பட்ட ஷா நவாஸ்கான் விசாரணை ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களான சுரேஷ் சந்திர போஸ் (நேதாஜியின் சகோதரர்), எÞ.என். மைத்ரா ஆகியோர், ‘நேதாஜி மறைந்ததாக ஷா நவாஸ்கான் கூறியதாக ஏற்றுக் கொள்ளவில்லை.’

பின்னாளில் ஷா நவாஸ்கான் அவர் மத்திய அமைச்சர் ஆனார். நேரு ஷா நவாÞகானை நியாயப்படுத்தி சுரேஷ் சந்திர போசுக்கு 1956 ஆகஸ்ட் 13 இல் கடிதம் எழுதி உள்ளார்.

நேதாஜி பயணித்ததாகச் சொல்லப்பட்ட விமானத்தில் பெருமளவு நிதிப் பெட்டகங்கள் இருந்ததாகவும், அதில் ஒரு பகுதி மட்டும் கிடைத்தாக விசாரணைக்குழு பதிவு செய்ததாகத் தெரிகிறது.

மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு நேதாஜி பற்றிய முழு உண்மைகளையும், அனைத்துக் கோப்புகளையும் வெளியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வந்தது.

ஆனால் தற்போது மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றபின், வெளிநாடுகளின் உறவு பாதிக்கும் என்ற, எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தைக் கூறி, நரேந்திர மோடி அரசு கோப்புகளை வெளியிட மறுக்கும் மர்மம் என்ன?

இந்தியாவின் 120 கோடி மக்களும் மதிக்கின்ற தலைவர் நேதாஜி ஆவார். நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தில் உயிர் நீத்த எண்ணற்றவர்கள் தமிழர்களே. 2002 ஆம் ஆண்டு ஜனவரி 23 இல் கொல்கத்தாவில் நேதாஜி நினைவு மாளிகையில் நடைபெற்ற நேதாஜி பிறந்த தின விழாக் கூட்டத்தில், கேப்டன் லட்சுமியுடன் நானும் பங்கேற்று உரை நிகழ்த்தினேன்.

1941 ஆம் ஆண்டு நேதாஜி தப்பிச் சென்ற காரை ஓட்டிச் சென்ற அவரது அண்ணன் மகன் சிசிர்குமார் போஸும், அவரது துணைவியார் டாக்டர் கிருஷ்ணா போஸும் சென்னையில் இரண்டு முறை என் வீட்டுக்கு வந்து பெருமைப்படுத்தினர். நேதாஜியின் மகள் அனிதா போஸ் சென்னைக்கு வந்தபோது நான் அவரைச் ந்தித்து உரையாடினேன்.

நேதாஜி குறித்த அனைத்துக் கோப்புகளையும் வெளியிட மறுத்த மத்திய அரசின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும், பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டிசம்பர் 23 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் எனது தலைமையில் மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x