Published : 23 Mar 2015 10:20 AM
Last Updated : 23 Mar 2015 10:20 AM

நீர்நிலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்: சென்னையில் நடந்தது

உலக நீர் நாளையொட்டி மாசுபடாத நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.நந்தபாலன் இந்த ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத் தார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கையேடும் அப்போது வெளியிடப் பட்டது. இந்த ஊர்வலம் குறித்து மாசு படாத கூவம் ஆறு பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் க.முகுந்தன் கூறியதாவது:

கூவம் ஆறு என்பது மாசுபட்ட ஆற்றின் மறு பெயராக கருதப் படுகிறது. இந்த ஆறு முற்றிலும் மாசுபடவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் கூவம் ஆற்றின் பெரும்பகுதி மாசுபடாமல் உள்ளது. மாசுபட்ட கூவம் ஆற்றை சுத்தம் செய்ய அரசு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் கூவம் ஆறு மேலும் மாசுபடுவதில் இருந்து தடுத்து நிறுத்த வேண் டும். கழிவுநீரை கூவத்தில் கலக்க விடாமல் கடலுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் பாதிப்பு, கொசுத் தொல்லை ஆகியவை தடுக்கப்படும்.

வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டுமென்றால், மாசுபடாத கூவம் ஆறு மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஊர்வலத்தை நடத்தினோம். இந்த ஊர்வலத்தில் அணைக்கட்டுச்சேரி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு கூவம் ஆற்றங்கரையோர கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x