Published : 05 Nov 2015 08:17 AM
Last Updated : 05 Nov 2015 08:17 AM

நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத காரணத்தால் குளம், குட்டை, ஏரியை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

குளம், குட்டை, ஏரி போன்ற நீர் ஆதாரங்களில் நீண்டகாலமாக தண்ணீர் இல்லை என்று கூறி ஆக்கிரமிப்பை அரசு அனுமதிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி தலைமையிலான சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாலுகா, மேனாம்பேடு கிராமம் மற்றும் கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்தி, வரன்முறை செய்து பட்டா தர உத்தரவிட வேண்டும். கொரட்டூர் ஏரிப் பகுதி யில் 3400 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஏரியை ஆக்கிரமித்த தாகக் கூறி, அவர்களில் 900 பேரை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நீர் இல்லாமல், குடிநீருக்கோ, பாசனத்துக்கோ நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அங்கு பட்டா கொடுப்பதற்கு வகை செய்யும் அரசாணை 30-12-2006-ல் பிறக்கப் பட்டது. அதன்படி, கொரட்டூர் ஏரி நீண்டகாலமாக பயன்படுத் தப்படாமல் இருப்பதால், அங்கு ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு பட்டா தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீர் நிலைகள் தொடர்பாக பிறப்பிக்கப் பட்ட அரசாணை செல்லும் என்றும், நீண்டகாலமாக பயன்படுத்தப் படாமல் இருக்கும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்தி பட்டா தரலாம் என்றும் உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில், நீராதாரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாதுகாப்பதுதான். அதனால், நீண்டகாலம் பயன்ப டுத்தப்படாமல் இருக்கிறது என்று காரணம் காட்டி, அங்கு ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இரண்டு டிவிஷன் பெஞ்ச்களின் தீர்ப்பும் முரண்பட்டதாக இருந் ததால், இந்த வழக்கு இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் (புல் பெஞ்ச்) விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு:

நீர் ஆதாரங்கள் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாதுகாப்பதுதான். நீர் நிலைகளில் கோடை காலத்தில் நீர் வற்றிப் போகும். மழைக்காலங்களில் மீண்டும் தண்ணீர் வந்து, நீர் ஊற்றெடுக்கும். நிலத்தடி நீரும் உயரும். நீண்டகாலமாக பயன் படுத்தப்படாமல் இருக்கும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசு செய்யவில்லை.

வருவாய் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு, நீர் நிலைகளை பயன் படுத்த முடியாத பகுதியாக்கி, ஆக்கிரமித்து அபகரித்து இருக் கலாம். அதனால் ஆக்கிரமிப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். ஒரு கிராமத் தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால், அதுகுறித்து அரசுக்கு அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி தெரிவிக்க வேண் டும். குளம், குட்டை, ஏரி போன் றவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான காரணம், அவற்றை உரிய முறையில் பயன் படுத்த வேண்டும் என்பதுதான். அதைச் செய்யத் தவறினால் பொதுமக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது போலாகும்.

எனவே, நீர் நிலைகளைப் பாழ்படுத்தும் நோக்கில் செயல் படுவதை ஏற்க முடியாது. நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்ற காரணத்துக்காக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட முழு பெஞ்ச், பிரதான வழக்கை மீண்டும் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x