Published : 28 Sep 2013 10:03 AM
Last Updated : 28 Sep 2013 10:03 AM

நளினியை முதல்முறையாக சந்தித்தார் வைகோ

இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து, அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் அக்டோபர் 22-ம் தேதி, பல்வேறு தூக்குத் தண்டனை வழக்குகள் தொடர்பான விசாரணை வருகிறது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்குகளைச் சேர்க்கவில்லை. தலைமை நீதிபதியின் விசாரணை குறித்த முடிவுகள் அப்போது வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதில், இந்த மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்தாக வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்குப் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்தச் சிக்கலை சமாளிக்க அங்கு ஜனநாயகம் இருப்பதுபோல காட்டிக்கொள்ள 25 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இது இந்தியா-இலங்கையின் சதித் திட்டம். ராஜபக்க்ஷே கூட்டணி வெற்றிபெறக்கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தமிழர்கள் வாக்களித்து, அபரிதமான வெற்றியைத் தேடித்தந்துள்ளார்கள். வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத்தினர், சிங்களவர்களை வெளியேற்றி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அதில், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ’மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என தேர்தல் நேரத்தில் கூறுவார்கள்’ இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியை வைகோ சுமார் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். நளினியை வைகோ சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது இருவருக்கும் நடந்த பேச்சுகள் தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x