Published : 24 Sep 2016 12:14 PM
Last Updated : 24 Sep 2016 12:14 PM

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல் இரவு 12 மணி அளவில் வெளியானது.

மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அதிமுகவினர் அதிக அளவில் மருத்துவமனை பகுதியில் குவிந்தனர். போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

அத்தகவலை உறுதி செய்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்தது.

பின்னர், முதல்வரின் உடல்நலம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்கு இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்" என கூறப்பட்டது.

மூன்றாவது நாளாக மருத்துவமனையில்:

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) மூன்றாவாது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார்" எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x