Published : 23 Jun 2016 08:50 AM
Last Updated : 23 Jun 2016 08:50 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:
சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நொறுக்குத் தீனிகள், குடிநீர், குளிர்பானம் போன்றவற்றை எடுத்து வர சினிமா திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் ரசிகர்கள் வேறு வழியில்லாமல் திரையரங்கினுள் உள்ள கடைகளிலேயே நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு இவற்றுக்கு அளவுக்கு அதிகமான விலை வைத்து விற்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நான் என் குடும்பத்தினருடன் பெரம்பூரில் உள்ள எஸ் 2 திரையரங்குக்கு சென்றபோது நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்களுக்கு ஏராளமான தொகை செலவிட நேரிட்டது. ஹிந்துஸ்தான் கோககோலா நிறுவனம் திரையரங்கு உரிமை யாளர்களுடன் சேர்ந்துகொண்டு திரையரங்குகளில் குளிர்பானங் களை அதிக விலைக்கு விற்கிறது.
திரையரங்குக்கு வெளியே குளிர்பானம் விற்கும் விலையைவிட திரையரங்கில் விற்கும் குளிர்பானத்தின் விலை மிக அதிகமாக இருக்கிறது. இதன்மூலம் சினிமா பார்க்க வரும் ரசிகர்களிடம் ஏராளமான பணத்தை கொள்ளையடிக்கின்றனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயண் முன்பு இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் பி.சஞ்சய்காந்தி நோட்டீஸ் பெற்றுக்கொண்டார். மனுவுக்குப் பதில் அளிக்கும்படி ஹிந்துஸ்தான் கோககோலா குளிர்பான நிறுவனம் மற்றும் எஸ் 2 திரையரங்க நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்டு 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT