Published : 10 Jul 2015 08:25 AM
Last Updated : 10 Jul 2015 08:25 AM

தாழ்த்தப்பட்டோருக்கான நிதி தமிழகத்தில் பயன்படுத்தப்படவில்லை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தகவல்

தமிழக பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத நிதியில் 2 சதவீதத்தை கூட அவர்களுக்காக பயன்படுத்தவில்லை என தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய தலைவர் பி.எல்.புனியா தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் பி.எல்.புனியா தலைமையில், உறுப்பினர்கள் கமலம்மா, ராஜூ பார்மர் உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று முன்தினம் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் சங்கங்களிடம் அவர்கள் கருத்து கேட்டனர்.

தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் சுப்ரமணியன், தலைமைச் செயலர் கு.ஞானதேசி கன், தமிழக டிஜிபி அசோக்குமார் மற்றும் துறைகளின் செயலர் களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து ஆணைய தலைவர் புனியா கூறியதாவது:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கல்வி தேசிய அளவை விட 7 சதவீதம் அதிக மாக உள்ளது. கல்வி கற்ற தாழ்த்தப் பட்ட பெண்கள் எண்ணிக்கையும் அதிகம். தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கான 1,314 விடுதிகளில் 482 விடுதிகள் மாணவிகளுக்கானவை. இவற்றில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து புகார் வந்ததால், ஆய்வு செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.

தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட் டவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டை, 20 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளோம். இவர்களில், 33 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்.

தமிழக நிதிநிலை அறிக்கையில், தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் 18 சதவீத நிதியில், 2 சதவீதம் மட்டுமே அவர்களுக்காக செலவிடப்படுகிறது. மீதமுள்ள நிதி பொதுத் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. இதை ஆணையம் அனுமதிக்காது.

தேசிய அளவில் தாழ்த்தப்பட் டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடக்கும் 5 மாநிலங் களில் தமிழகமும் ஒன்று. வன் கொடுமை தொடர்பான புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதி யாமல், நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே பதிவு செய்யப்படுகிறது.

வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆதாரம் இல்லாவிட்டால் வழக்கை முடிக்கலாம். ஆனால், தமிழகத்தில் 70 சதவீதம் வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 10 சதவீதம் வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் தொடர் பான விஷயங்களை கண்காணிக்க மாநில அளவில் முதல்வர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டிய இந்த குழு, மாநில அளவில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 25-க்குப் பின் கூடவில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் என போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்துள்ள 2000 பேரையும் பணியில் இருந்து உடனடியாக நீக்கி, குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம்.

வேறு ஜாதி பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். கவுரவ கொலைகள் விவகாரத்தில் நீதி மறுக்கப்பட்டால் மட்டுமே ஆணையம் தலையிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x