Published : 15 Dec 2016 08:13 PM
Last Updated : 15 Dec 2016 08:13 PM

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் நான், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1 முதல் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி, அகவிலைப்படி 125 சதவீதத்திலிருந்து 132 சதவீதமாக உயரும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

1.7.2016 முதல் 30.11.2016 வரை உள்ள காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல் இந்த அகவிலைப்படி உயர்வு சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,833 கோடியே 33 லட்சமாக இருக்கும்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x