Published : 29 Jul 2016 06:20 PM
Last Updated : 29 Jul 2016 06:20 PM

தமிழக அரசு அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக அரசு அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட்டு, விமர்சனங்களை ஜனநாயகப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் அந்த ஆட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளையும், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் தனிநபர்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவுசெய்வது வழக்கமாகி கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆட்சியிலும் அதற்கு முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி தங்கள் ஆட்சியில் போடப்படும் வழக்குகளை நியாயப்படுத்தும் போக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காகவே அவதூறு வழக்குகளை பயன்படுத்தியது.

இது தொடர்பான வழக்குகளில் ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு ஜனநாயகத்தை ஒடுக்குவதற்கும், அரசியல் எதிரிகளை தண்டிப்பதற்கும், அவதூறு வழக்குகளை பயன்டுத்துவதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்க நிர்ப்பந்திக்கும் விளைவை ஏற்படுத்துவது தவறானது என்று விமர்சித்திருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தில் அரசியல் எதிரிகளின் பேரில் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. ஜனநாயகத்தில் விமர்சனம் என்பது அடிப்படை உரிமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு தவறாக பயன்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை, இன்று ஜனநாயக நாட்டில் பயன்படுத்துவது குறித்து தனது அதிருப்தியை உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், நடுநிலையாளர்கள் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் அதிமுக அரசு தனது ஜனநாயக விரோத நிலைபாட்டை கைவிடவில்லை. அவதூறு வழக்குகளை பயன்படுத்தி அரசியல் கட்சியினரை பழிவாங்க கூடாது என்பதை வலியுறுத்தியும், இதற்கு அரசு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் தமிழக அரசு அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்தது.

உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட வேண்டுமெனவும், விமர்சனங்களை ஜனநாயகப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x